கட்டு கட்டாய் பணம்.. கட்டி கட்டியாய் தங்கம்! ஐஆர்எஸ் வீட்டில் மறைந்து கிடந்த பொக்கிஷம்.. ஷாக் டெல்லி
டெல்லி: டெல்லியில் பீட்சா கடைக்காரர்களிடம் லஞ்சம் பெற்றதாக வருமான வரித்துறையில் பணியாற்றும் ஐஆர்எஸ் அதிகாரியின் வீட்டில் சிபிஐ நடத்திய சோதனையில், கட்டுக் கட்டாக பணம், 3 கிலோ தங்கம், 2 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த ஐஆர் எஸ் அதிகாரியை கைது செய்த அதிகாரிகள் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த சில தினங்களாகவே வருமானவரித்துறை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள், லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகள் தான் சோதனை நடத்துவார்கள்.
ஆனால் அவர்கள் வீட்டிலேயே சோதனை நடத்தி கட்டு கட்டாக பணமும், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான் தலைநகர் டெல்லியில் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட ஐஆர்எஸ் அதிகாரியின் வீட்டில் சோதனை நடத்தி இருக்கின்றனர் சிபிஐ அதிகாரிகள்.

அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத பணம் தங்கம் வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் அமித் குமார் சிங்கால் என்பவர் டெல்லி வரி செலுத்துனர் சேவைகள் இயக்குனரகத்தில் கூடுதல் தலைமை இயக்குனராக பணியாற்றி வந்திருக்கிறார். இந்த நிலையில் டெல்லியில் இருக்கும் பிரபலமான லா பினோஸ் பீட்சா நிறுவனத்தின் உரிமையாளரான சனம் கபூரிடம் 45 லட்சம் ரூபாயை லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது.
முதற்கட்டமாக 25 லட்சம் ரூபாயை கேட்ட நிலையில், லஞ்சம் தரவில்லை என்றால், கடுமையான வரி விதிப்பு நடவடிக்கைகள், அபராதம், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமித் குமார் சிங்கால் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் டெல்லி சிபிஐ அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். சிபிஐ அதிகாரிகள் வகுத்த திட்டத்தின் படி அமித் குமார் சிங்காலின் கூட்டாளியான ஹர்ஷ் கோடக் என்பவர் பீட்சா நிறுவன உரிமையாளரான சனம் கபூரிடம் 25 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக சிக்கினார்.
அவரை பஞ்சாப் மாநிலம் மொகாலியில் வைத்து கைது செய்த சிபிஐ அதிகாரிகள், அதே நாளில் அமித் குமார் சிங்காலுக்கு சொந்தமான டெல்லி வசந்த் குஞ்ஜ் பகுதியில் உள்ள அவரது வீட்டில் சோதனை செய்தனர். அது மட்டும் அல்லாமல் டெல்லி, மும்பை, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள சிங்காலின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் சுமார் மூன்றரை கிலோ தங்கம், 2 கிலோ வெள்ளி, ஒரு கோடி ரூபாய் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பல முக்கிய ஆவணங்கள், 25 வங்கி கணக்குகள், வங்கி லாக்கர் விவரங்கள், நில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இவற்றின் மொத்த மதிப்பு மூன்றரை கோடிக்கும் அதிகமாக இருக்கும் என சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
2007 ஆம் ஆண்டு ஐஆர்எஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்த அமித் குமார் தான் பணியாற்றிய மாநிலங்களில் பிரபல நிறுவனங்களில் உரிமையாளர்களை குறி வைத்து வசூல் வேட்டை நடத்தி இருக்கிறார். தற்போது டெல்லியில் அவர் பணியாற்றிய நிலையில் தான் பீட்சா நிறுவன உரிமையாளர்களும் லஞ்சம் பெற்று கைதாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications