CBSE Class 10: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு First Group கிடைக்கணுமா? சூப்பர் சான்ஸ்!
சென்னை: சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு முக்கியச் செய்தி! 2026-ஆம் ஆண்டுக்கான இரண்டாம் கட்டப் பொதுத் தேர்வு அட்டவணையை சிபிஎஸ்இ வாரியம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
மாணவர்களின் தேர்வு பயத்தைப் போக்கவும், அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும் சிபிஎஸ்இ (CBSE) வாரியம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது.

அதன்படி, 2026-ஆம் ஆண்டு மே மாதம் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் கட்டப் பொதுத் தேர்வுகள் நடைபெறவுள்ளன. ஒரே கல்வி ஆண்டில் மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை உயர்த்தி மெருகேற்றிக் கொள்ள இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.
தேர்வு கால அட்டவணை (மே 2026)
தேர்வுகள் அனைத்தும் காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை ஒரே ஷிஃப்டில் நடைபெறும். முக்கியப் பாடங்களுக்கான அட்டவணை இதோ:
மே 15: கணிதம் (Standard & Basic)
மே 16: ஆங்கிலம்
மே 18: அறிவியல்
மே 19: மொழிப் பாடங்கள் (தமிழ், இந்தி உள்ளிட்டவை) மற்றும் திறன் சார்ந்த பாடங்கள் (சுற்றுலா, சில்லறை வர்த்தகம்).
மே 20: தகவல் தொழில்நுட்பம் (IT), செயற்கை நுண்ணறிவு (AI), ஓவியம் மற்றும் சமஸ்கிருதம்.
மே 21: சமூக அறிவியல்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? (தகுதிகள்)
இந்த இரண்டாம் கட்டத் தேர்வில் பங்கேற்க சிபிஎஸ்இ சில முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளது:
முதல் பொதுத் தேர்வில் குறைந்தது மூன்று பாடங்களில் பங்கேற்றிருக்க வேண்டும்.
தேர்ச்சி பெற்றிருந்தாலும், அதிகபட்சம் 3 பாடங்களில் மதிப்பெண்களை உயர்த்த (Improvement) விரும்பும் மாணவர்கள்.
'கம்பார்ட்மென்ட்' (Compartment) பிரிவில் உள்ள மாணவர்கள்.
முன் அனுமதி பெற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் விதிகளுக்கு உட்பட்ட UFM பிரிவு மாணவர்கள்.
முதல் தேர்வில் மூன்று பாடங்களுக்கும் குறைவாகப் பங்கேற்றவர்களுக்கும், 'அத்தியாவசிய மறுதேர்வு' (Essential Repeat - ER) பிரிவில் உள்ளவர்களுக்கும் இதில் பங்கேற்கத் தகுதியில்லை.

இந்த புதிய முறையின் சிறப்பம்சமே அதன் மதிப்பீட்டுக் கொள்கைதான். ஒரு மாணவர் முதல் தேர்விலும், இரண்டாம் கட்டத் தேர்விலும் பங்கேற்றால், அந்த இரண்டில் எந்தத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளாரோ, அதுவே இறுதியானதாகக் கருதப்படும். இதனால் மாணவர்கள் எவ்வித தயக்கமும் இன்றித் தேர்வை எழுதலாம்.
முடிவுகள் எப்போது?
வழக்கமாகத் தேர்வுகள் முடிந்த 4 முதல் 6 வாரங்களுக்குள் சிபிஎஸ்இ முடிவுகளை அறிவிக்கும். அந்த வகையில், இந்த இரண்டாம் கட்டத் தேர்வு முடிவுகள் ஜூன் 2026-க்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"ஒரே ஒரு வாய்ப்பை நம்பி மாணவர்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்பட்ட பழைய முறை மாறி, இப்போது நெகிழ்வுத்தன்மை வந்துள்ளது. இது மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, ஒரு வருடம் வீணாவதையும் தடுக்கும்" என கல்வியாளர்கள் இம்முயற்சியைப் பாராட்டுகின்றனர்.
மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மூலம் வழங்கப்பட்ட அனுமதி அட்டையை (Admit Card) தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த இரண்டாம் கட்ட தேர்வை எழுதும் மாணவர்கள் ஏற்கனவே பெற்ற மதிப்பெண்களை விட கூடுதலாக பெற வாய்ப்புள்ளது. அப்படி பெற்றால் அவர்களுக்கு அவர்கள் விரும்பும் கம்ப்யூட்டர் சயின்ஸ், பயாலஜி உள்ளிட்ட பர்ஸ்ட் குரூப்களே பிளஸ் 1 வகுப்பில் கிடைக்க வாய்ப்புள்ளது. பள்ளியை மாற்றுவோருக்கும் இந்த கூடுதல் மதிப்பெண்கள் கைகொடுக்கும்.
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வுகள் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி முதல் மார்ச் 11-ஆம் தேதி வரை நடந்து முடிந்தது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட இந்த தேர்வில் 25,08,319 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 14,08,546 மாணவர்களும், 10,99,773 மாணவிகளும் அடங்குவர். நாடு முழுவதும் 8,075 தேர்வு மையங்களில் 83 பாடங்களுக்குத் தேர்வுகள் நடத்தப்பட்டன.
இந்த முதல் கட்ட தேர்வு முடிவுகள் ஏப்ரல் 15 ஆம் தேதி வெளியாகின. தமிழகத்தில் இந்த முறை தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது 99.92 சதவீதம் ஆகும்.














Click it and Unblock the Notifications