பேரு பெத்த பேரு... மத்திய அரசு அம்மஞ்சல்லி நிதி தரவில்லை.. சட்டசபையில் தாக்கிய தங்கம் தென்னரசு
சென்னை: வெள்ள நிவாரணமாக மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு இதுவரை எந்த நிதியும் தரவில்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசு திட்டங்களின் பெயர்கள் பெரிதாக இருக்கிறதே தவிர, தமிழ்நாட்டுக்கு எந்த நிதியும் தரவில்லை என்றும் கிண்டலடித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் 2024-2025ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் கடந்த 19ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது . நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஏராளமான புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். தொடர்ந்து கடந்த 20ம் தேதி 2024-25ம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த இரண்டு நாட்களாக பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. நிறைவு நாளில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து பேசினர்.
சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்து பேசினார். அப்போது அவர், அரசுக்கு மாபெரும் தமிழ்க்கனவு உள்ளது; அதனை கருத்தில் கொண்டுதான் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்திலும் சமூக நீதி பிரதிபலிக்கிறது. மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்துக்கு ரூ.3,050 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கட்டணமில்லா பேருந்து பயணத்தின் மூலம் தமிழ்நாடு மகளிர் ஒவ்வொரு மாதமும் ரூ.900 சேமிக்கின்றனர். கிராம சாலைகள் திட்டத்தை தமிழ்நாடு அரசு தனது சொந்த செலவில் செயல்படுத்துகிறது.
வெள்ள நிவாரணமாக மத்திய அரசு இதுவரை எந்த நிதியும் தரவில்லை. ஏழைகள் வீடு கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு 30% மட்டுமே நிதி அளிக்கிறது; ஆனால் பெயருக்கு மட்டும் பிரதமர் வீடு கட்டும் திட்டம் என்று வைத்திருக்கிறார்கள்.
மத்திய அரசு திட்டங்களின் பெயர்கள் பெரிதாக இருக்கிறதே தவிர, தமிழ்நாட்டுக்கு எந்த நிதியும் தரவில்லை. "இதைத்தான் பேரு பெத்த பேரு தாக நீரு லேது" என்று சொல்வார்கள்.
குஜராத் வெள்ள பாதிப்புக்கு அள்ளிக் கொடுக்கும் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு மட்டும் பாரபட்சம் காட்டுகிறது. இதுவரை அம்மஞ்சல்லி கூட தரவில்லை. தமிழ்நாட்டு மக்கள் திராவிட மாடல் அரசுக்கு ஆதரவளிப்பதால் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது.
குஜராத் முதல்வராக இருந்தபோது மாநில உரிமைக்காக பேசிய மோடி, இப்போது மாநில உரிமைகளை மதிப்பதில்லை. பிரதமர் தூத்துகுடிக்கு வருவதற்கு முன்பே ஒன்றிய அரசு வெள்ள நிவாரண நிதியை வழங்கும் என நம்புகிறேன் என்றும் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications