தக்காளி விலை எப்போது குறையும் தெரியுமா? தேதி குறித்த மத்திய அரசு.. வெளியான முக்கிய தகவல்!
சென்னை: கடந்த சில நாட்களாக திடீரென தக்காளி விலை ரூ.100ஐ தொட்டது. சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் சில இடங்களில் தக்காளி ரூ.100ஐ கடந்து விற்பனையானது. இந்நிலையில், தக்காளி விலை எப்போது சரியும் என்பது குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
சென்னை மக்களின் காய்கறி தேவையை பூர்த்தி செய்யும் இடமாக கோயம்பேடு சந்தை இருக்கிறது. இந்த சந்தைக்கு தினமும் 1,200 டன் காய்கறிகள் வரும். ஆனால் பருவமழை மற்றும் விளைச்சல் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட அளவில் காய்கறிகள் வரவில்லை. குறிப்பாக 85 லாரிகளில் தினமும் 750 டன் தக்காளி சென்னைக்கு வரும்.
ஆனால் கடந்த 4 நாட்களாக வெறும் 35 லாரிகளில் மட்டுமே தக்காளி வந்திருக்கிறது. அதாவது தக்காளி வரத்து பாதியாக குறைந்திருக்கிறது. எனவே விலை அதிகமாக இருக்கிறது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், "கடந்த மாதம் முழுவதும் தக்காளி கிலோ 10 ரூபாய்க்குதான் விற்பனையானது. மேலும் அதிக அளவில் மீதமிருந்ததால் நாங்கள் கொட்டிவிட்டோம். ஆனால், இன்று நிலைமை தலைகீழாக இருக்கிறது. வழக்கமாக வரும் லோடு எதுவும் இன்று வரவில்லை.

மொத்த வியாபாரிகளான எங்களுக்கு போதுமான அளவு தக்காளி வராதபோது சில்லறை வியாபாரிகளுக்கு எப்படி தக்காளி கிடைக்கும்? எனவே தற்போது எங்களுக்கு கிடைத்துள்ள லோடை கொண்டு வியாபாரம் செய்து வருகிறோம். வரத்து பற்றாக்குறைதான் இந்த விலையேற்றத்திற்கு காரணம். அதுமட்டுமல்லாது சில வியாபாரிகள் குளிர்சாதன கிடங்கில் சேமித்து வைத்து அடுத்த நாளும் விற்பனை செய்கின்றனர்.
ஆனால் எல்லா வியாபாரிகளுக்கும் இது சாத்தியமில்லை. எனவே அரசு குளிர்சாதன கிடங்குகளை கட்டி தர வேண்டும். அப்போதுதான் வியாபாரிகள் காய்கறிகளை சேமித்து வைத்து தட்டுப்பாடு ஏற்படாமல் விற்பனை செய்ய முடியும். தற்போது 15 கிலோ தக்காளி பெட்டி ரூ.800-900 வரை வாங்கி வருகிறோம்" என்று கூறியிருந்தனர். இதனையடுத்து நேற்று தக்காளி வரத்து ஓரளவு அதிகரித்தது. இதனால் கிலோ ரூ.100 என விற்கப்பட்ட தக்காளி, ரூ.60 வரை குறைந்தது.
இந்நிலையில் தக்காளி விலை எப்போது குறையும் என்பது குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நுகர்வோர் நலத்துறை செயலாளர் ரோகித் குமார் சிங், "ஆண்டின் 365 நாட்களிலும் தக்காளி விநியோகத்தை சீராக்குவதற்கான தீர்வைக் கண்டறிய மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
இதை எப்படி பாதுகாப்பாக சேமிப்பது உள்ளிட்டவை குறித்து ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் மாணவர்களிடமிருந்தும் வரவேற்கப்படுகின்றன. அடுத்த 15 நாட்களில் தக்காளி விலை குறைந்துவிடும். அடுத்த ஒரு மாதத்தில் விலை இயல்பை எட்டும் " எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications