விஜயகாந்த்துக்கு நாளை மத்திய அரசு மரியாதை.. வருகை தரும் நிர்மலா சீதாராமன்? வெளியான முக்கிய தகவல்
சென்னை: நடிகரும், தேமுதிகவின் நிறுவன தலைவருமான விஜயகாந்துக்கு நாளை மத்திய அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட உள்ளதாகவும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகராக இருந்து அரசியலில் நுழைந்த விஜயகாந்த் தேமுதிக எனும் கட்சியை தொடங்கி எம்எல்ஏவானார். அதன்பிறகு தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை எட்டிப்பிடித்தார். அரசியலில் இப்படி வளர்ந்து வந்த நிலையில் திடீரென்று உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து அவர் தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்தார். சமீபகாலமாக தொடர்ந்து உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த விஜயகாந்த் இன்று காலை 6.10 மணிக்கு காலமானார். சென்னையில் தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிர் பிரிந்தது.
இதையடுத்து விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள், பொதுமக்கள் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தற்போது கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் விஜயகாந்தின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் நாளை காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை வைக்கப்பட உள்ளது.
அதன்பிறகு அங்கிருந்து ஊர்வலமாக தேமுதிக தலைமை அலுவலகம் எடுத்து வரப்பட்டு இறுதி சடங்குகளோடு மாலை 4.45 மணிக்கு அடக்கம் செய்யப்பட உள்ளது. விஜயகாந்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். அதன்படி நாளை விஜயகாந்தின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.
இதற்கிடையே தான் நாளை மத்திய அருசு சார்பில் விஜயகாந்த் உடலுக்கு மரியாதை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அரசு சார்பில் பிரதிநிதி ஒருவர் நேரில் வந்து விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த உள்ளார். அதன்படி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வரலாம் என கூறப்படுகிறது. முன்னதாக விஜயகாந்த் மறைவுக்கு இன்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து இருந்தார். அதோடு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சென்று விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications