சுற்றுச்சூழலை காத்ததற்கு கவுரவம்... விவேக் பெயரில் தபால் தலை... பரிசீலிக்கும் மத்திய அரசு..!
சென்னை: மறைந்த நடிகர் விவேக்கை கவுரவிக்கும் வகையில் அவரது பெயரில் தபால் தலை வெளியிடுவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
நடிகர், மேடைப்பேச்சாளர், என்பதை கடந்து சுற்றுச்சூழல் ஆர்வலராக திகழ்ந்த நடிகர் விவேக் இதுவரை 37 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார். அவற்றில் பல லட்சம் மரக்கன்றுகள் இன்று பெரிய மரங்களாக உருவாகி இந்த பூமிக்கு ஆக்சிஜனை அளித்துக் கொண்டிருக்கின்றன.

ஆக்சிஜனுக்காக இன்று நாடே மூச்சுத்திணறி வரும் வேளையில், மரக்கன்றுகளை நடுவதற்காக விவேக் ஆற்றிய தொண்டு குறித்த தகவல் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
இன்றைய தேதியில் ஆக்சிஜனின் தேவை எந்தளவு முக்கியம் என்பதை உணர்ந்தும் இயற்கையான முறையில் ஆக்சிஜன் தரக்கூடிய மரங்களை வளர்க்க, நடிகர் விவேக் எந்தளவு தனது நேரத்தை செலவிட்டிருக்கிறார் என்பதை எண்ணிப்பார்த்தும் அவரை கவுரவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்கு சென்றிருக்கின்றன.
இதையடுத்து மறைந்த நடிகர் விவேக்கின் சுற்றுச்சூழல் காக்கும் பணிகளை பாராட்டி கவுரவிக்கும் வகையில், அவரது பெயரில் ஸ்டாம்ப் வெளியிடுவது தொடர்பான பரிசீலனை தற்போது நடைபெற்று வருகிறது.
தற்போது கொரோனா விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் அதன் மீதான தடுப்பு பணிகளில் மத்திய அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. இதனால் மறைந்த விவேக்கை கவுரவிக்கும் வகையிலான அறிவிப்பு மே மாதத்தில் மத்திய அரசிடம் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு கவுரவிப்பது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மற்றவர்களுக்கும் ஒரு வித நம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளிக்கும். அப்துல் கலாமை சந்தித்த பிறகு அவர் அளித்த ஊக்கம் காரணமாகவும், வேண்டுகோளை ஏற்றும் ஒரு கோடி மரம் நடும் பணியை விவேக் முன்னெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications