நிறுவனங்களுக்கு சூப்பர் சலுகைகள்.. அதேபோல விவசாயிகளின் அத்தனை கடன்களையும் தள்ளுபடி செய்யலாமே?
சென்னை: கொரோனா லாக்டவுனை முன்வைத்து தொழில்துறையினருக்கு ஏராளமான சலுகைகளை அறிவித்துள்ளது மத்திய அரசு. இதேபோல் வாழ்வாதாரங்களை இழந்திருக்கும் விவசாயிகள் வாழ்விலும் ஒளியேற்ற கடன்கள் தள்ளுபடி உள்ளிட்ட அறிவிப்பை மத்திய அரசு வெளியிடுமா? என்பது எதிர்பார்ப்பு.
கொரோனா பரவுவதைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் ஒவ்வொரு துறையிலும் பிரளயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி முடங்கிப் போயுள்ளது.
தேசமே 50 நாட்கள் முடங்கி இருப்பதால் ஒவ்வொரு துறையும் அடுத்த அடியை நகருவதற்கு பெரும் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த துயரங்களைத் தீர்க்க வேண்டிய மிகப் பெரும் கடமையுடன் மத்திய அரசும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
2019ல் கூட பூமிக்கு வந்தது.. பென்டகன் வெளியிட்ட "யுஎஃப்ஓ" வீடியோ குறித்த புது தகவல்கள்.. ஏலியன்களா?
உத்வேகத்துடன் தொழில் நிறுவனங்கள்
அதுவும் பிரதமர் மோடி அறிவித்த ரூ20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார திட்டங்கள் மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஒவ்வொரு துறையிலும் ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடியின் அறிவிப்பை தொடர்ந்து நேற்று செய்தியாளர்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தார். அப்போது ரூ20 லட்சம் கோடி திட்டத்தின் முக்கிய அம்சங்களை விவரித்தார். இது தொழில் நிறுவனங்களுக்கு பெரும் உத்வேகத்தை கொடுத்திருக்கிறது.
வங்கி கடன் உதவிகள்
இதேபோல் வருமான வரி செலுத்துவோர்; வங்கித் துறையினர், நிதி நிறுவனங்களை நடத்துவோர் என ஒவ்வொரு பிரிவினருக்குமான சலுகைகள், கடன் உதவிகள் அறிவிக்கப்பட்டன. சிறு, குறு தொழில்கள் தொடர்பான வரம்புகள் மாற்றி அமைக்கப்பட்டன. இந்த நிறுவனங்களின் வங்கி கடன்களுக்கு அரசே உத்திரவாதத்தையும் வழங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
இருப்பினும் தனிநபர்களுக்கு எந்த ஒரு திட்டமும் இல்லையே என்கிற ஆதங்கம் வெளிப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்றும் மத்திய அரசின் அடுத்த செயல் திட்டம் குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்திக்கிறார். இன்று வேளாண்துறையினருக்கான பல்வேறு சலுகைகளை நிர்மலா சீதாராமன் அறிவிக்கலாம் என கூறப்படுகிறது.
கடன்கள் தள்ளுபடி?
இச்சந்திப்பின் போது தாங்கள் வங்கிகளில் பெற்ற கடன்கள் உள்ளிட்டவைகளை மொத்தமாக தள்ளுபடி செய்தால் நன்றாக இருக்கும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பு. லோக்சபா தேர்தலின் போது திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இத்தகைய ஒரு வாக்குறுதியை மக்களிடத்தில் வைத்திருந்தன. அது மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றிருந்தது. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசும் தற்போதைய நெருக்கடியான சூழலில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யுமா? என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.