நெல்லை, குமரி, டெல்டா மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு... குடை அவசியம் மக்களே
இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் பல ஊர்களில் கோடை வெயில் கொளுத்தினாலும் வெப்பத்தை சமாளிக்கும் வகையில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம், முதுகுளத்தூர், கடலாடி, ஒட்டன்சத்திரம், ஆர்.எஸ்.மங்கலம், வட்டானம் பகுதிகளில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு
கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இரண்டு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மிதமான மழை பெய்யும்
10ஆம் தேதி முதல் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 11 மற்றும் 12ஆம் தேதிகளில் தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் மேக மூட்டம்
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.

வெப்பநிலை அறிக்கை
கோடை வெப்பம் பல நகரங்களில் தகித்து வருகிறது. கரூர் பரமத்தியில் 40 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. ஈரோடு நகரில் அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. தருமபுரி,மதுரை, சேலத்தில் 38 டிகிரி செல்சியஸ், வேலூர், திருத்தணி,திருச்சி, நாமக்கல், தஞ்சாவூர், கோவையில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications