சில்சில் மழையே! இன்னும் 5 நாளைக்கு கொடைக்கானலாய் மாறப் போகும் தமிழ்நாடு! ஜாலி தான் போங்க!
சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றுமுதல் வரும் 18-ம் தேதி வரை, தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. ஒருசில இடங்களில் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் பெய்தது.
கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 3 செ.மீ. மழையும், சோலையாறு, பந்தலூர், ஹரிசன் எஸ்டேட், செருமுள்ளி ஆகிய பகுதிகளில் தலா 2 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. வேடசந்தூர், நடுவட்டம் மற்றும் கோத்தகிரியில் தலா ஒரு செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

வானிலை அறிவிப்பு
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

18-ம் தேதி வரை மிதமான மழை
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில், வரும் 18-ம் தேதி முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் லேசான மழை
சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில், மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இன்று சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications