தமிழகத்தின் பல மாவட்டங்கள் குளுகுளுவென இருக்கும்.. 5 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை மையம்
சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நகரின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கடந்த வாரங்களில் மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு, சேலம் மாவட்டம் ஏற்காடு ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. விருதுநகர் மாவட்டம் கோவிலாங்குளம், அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

வானிலை அறிவிப்பு
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

20-ம் தேதி வரை மழை தொடரும்
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில், வரும் 20-ம் தேதி முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் லேசான மழை
சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், வரும் 19 மற்றும் 20-ம் தேதிகளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications