அடுத்த 2 மணி நேரம் முக்கியம்.. இடி மின்னலுடன் 10 மாவட்டங்களில் பெய்யப்போகும் மழை - வானிலை மையம்
சென்னை: கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழையானது கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தாலும், தமிழ்நாட்டிற்கு போதுமான அளவுக்கு மழையை கொடுத்திருக்கிறது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த ஜூன் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை வழக்கமாக 328.4 மி.மீ மழையை பெறும். இந்த முறை 354 மி.மீ அளவுக்கு மழை பொழிந்திருக்கிறது. எதிர்பார்த்ததைவிட -19% முதல் +19% கூடுதல் குறைவாக மழை பெய்தால் அது இயல்பான அளவு என கணக்கிடப்படுகிறது.

அதேபோல திருநெல்வேலி, சென்னை மற்றும் காஞ்சிபுரம் இந்த மூன்று மாவட்டங்கள் இயல்பை விட 60% அதிக அளவு மழையைப் பெற்றுள்ளன. திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்கள் 20% முதல் 59% வரை அதிக மழையை பெற்றிருக்கின்றன. ஆனால் அதே சமயம் திருப்பூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவாரூர் மாவட்டங்கள் வழக்கத்தை விட 20% முதல் 59% வரை குறைவான மழை அளவை பெற்றிருக்கின்றன. மீதமுள்ள 21 மாவட்டங்கள் இயல்பான அளவில் மழையை பெற்றிருக்கிறது.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் அடுத்த 2 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் இடி,மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், "தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, அரியலூர், திருச்சி மற்றும் மயிலாடுதுறை என 10 மாவட்டங்களில் மழை பெய்யும். அதேபோல திருப்பத்தூர், வேலூர், மதுரை, திண்டுக்கல், திருவண்ணாமலை மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.
இதன் காரணமக தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்குவதற்கும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. எனவே வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்கவும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தவிர நாளை மற்றும் நாளை மறுநாள் 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதாவது, அக்.08 மற்றும் அக்.09ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என ஆய்வு மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications