அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை கொட்டும்.. வானிலை மையம் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில், 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், நீலகிரி கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

பொதுவாக வானிலை மையம் மழை குறித்து வெளியிட்டுள்ள எச்சரிக்கை என்ன என்பதையும் இப்போது பார்ப்போம்.. சென்னை வானிலை ஆய்வு மையம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
"தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 6ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே கேரளாவில் தென்மேற்கு பருவ மழை அடுத்த 3 நாட்களுக்கு பெரிய அளவில் கொட்டபோகிறது. கடலோர கர்நாடகா மாநிலத்திலும், காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளான வயநாடு மற்றும் குடகு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கப்போவதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. இன்று முதல் நான்கு 5 நாட் களுக்கு கேரளாவின் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவின் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்ணூர் மற்றும் காசர் கோடு மாவட்டங்களுக்கு நாளை முதல் 5-ந்தேதி வரையிலும் எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம், கோழிக் கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு 4-ந்தேதியும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 115 மில்லி மீட்டர் முதல் 204 மில்லி மீட்டர் வரை மழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு தொடங்கி அடுத்த 3 நாட்களுக்கு பெரிய அளவில் மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications