நயினார் நாகேந்திரனுக்காக பிரச்சாரம் செய்ய வரும் சந்திரபாபு நாயுடு.. பின்னணியில் சாதி ஓட்டு கணக்கு?
விருதுநகர்: சாத்தூர் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து ஆந்திர மாநில முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு வரும் 21 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். சாத்தூர் தொகுதியில் நாயக்கர் சமூக மக்கள் கணிசமாக உள்ளனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தற்போது தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. வரும் 21 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள். எனவே வேட்பாளர்கள் தற்போது வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது தேசிய தலைவர்களும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் பலரும் பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகின்றனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழகம் வந்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக உடன் இணைந்து செயல்படும் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில், அக்கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு, சாத்தூரில் பாஜக சார்பில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளான ஏப்ரல் 21 அன்று சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்ய இருக்கிறார். முன்னதாக நயினார் நாகேந்திரனின் தேர்தல் பிரச்சார பேரணியை மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் 21 ஆம் தேதி துவக்கி வைக்க இருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து அன்று பிற்பகல் 2 மணியளவில் சாத்தூருக்கு வருகை தரும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, சாத்தூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். மேலும் அன்றைய தினமே தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அவர் ஆந்திரா திரும்ப இருக்கிறார்.
சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில், முக்குலத்தோருக்கு அடுத்து அதிகமாக நாயக்கர் சமூக மக்கள் உள்ளனர். நாயக்கர் சமூக வாக்காளர்கள் இங்கு வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர். இந்நிலையில் அங்கு சந்திரபாபு நாயுடு பிரச்சாரம் செய்வது தனக்கு கைகொடுக்கும் என்பது நயினார் நாகேந்திரனின் எதிர்பார்ப்பாம்.














Click it and Unblock the Notifications