ஆந்திராவில் ஆட்சியை இழக்கிறார் சந்திரபாபு நாயுடு.. அடுத்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி?
சென்னை: ஆந்திர சட்டசபை தேர்தலில் ஆளும் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வி அடையும் என கருத்துக்கணிப்புகளில் தெரியவந்துள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உள்ளதாகவும் கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாயின.
அதன்படி இந்தியாடிவி , சிஎன்எக்ஸ் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் வரும் தேர்தல் முடிவில் மொத்தம் 175 தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 100 முதல் 110 வரையிலான தொகுதிகளை பிடிக்கும்.
தெலுங்கானாவில் பாஜகவுக்கு ஒரு இடம் கிடைக்கிறதே குதிரை கொம்பாம்! ஆந்திராவில் அதுவும் இல்லை.. சாணக்யா!
தெலுங்கு தேசம் - சரிவு
கடந்த தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 67 தொகுதிகளை பிடித்திருந்தது. இம்முறை 40 தொகுதிகள் வரை கூடுதலாக பெற வாய்ப்பு உள்ளது. இது போல் ஆளும் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் இந்த முறை 40 முதல் 45 தொகுதிகளை மட்டுமே பெறும்.
பாஜகவுக்கு 4
கடந்த முறை தெலுங்கு தேசம் கட்சி 102 தொகுதிகளை கைப்பற்றியது. பா.ஜ.கவுக்கு 4 முதல் 6 தொகுதிகள் வரை கிடைக்கும். காங்கிரஸ் கட்சிக்கு 8 முதல் 12 தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
ஜெகன்தான் அடுத்த முதல்வர்
சந்திரபாபு நாயுடு ஆட்சியை இழப்பார் என்றும் ஜெகன்மோகன் ரெட்டி பெரும் மெஜாரிட்டியுடன் ஆந்திர மாநிலத்தின் முதல்வராவார் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.
ஓட்டு சதவீதம் அதிகரிக்கும்
இதேபோல் லோக்சபா தேர்தலில் ஆந்திராவில்; ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 25 தொகுதிகளில் 18 தொகுதிகளை கைப்பற்றும். எஞ்சிய 7 தொகுதிகளை தெலுங்குதேசம் பெறும். பா.ஜ.,வுக்கும், காங்கிரசுக்கும் ஓட்டுசதவீதம் அதிகரிக்கும் ஆனால் ஒரு தொகுதிகளைகூட பிடிக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.