எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த சறுக்கல்.. உதவியாளருக்கு முன்ஜாமீன் கிடையாது.. ஹைகோர்ட் அதிரடி
எடப்பாடி பழனிசாமியின் உதவியாளருக்கு ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது
சென்னை: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் தின்னப்பட்டி அருகே உள்ள பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் முன்னாள் முதல்வர் பழனிச்சாமியின் உதவியாளராக கடந்த 10 ஆண்டு காலமாக இருந்து வருகிறார்.
பழனிச்சாமிக்கு உதவியாளராக இருந்தபோது ஓமலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல நபர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றதாக பல்வேறு புகார்கள் இருந்து வந்தன.

பணமோசடி
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவருக்கு அரசு போக்குவரத்து கழகத்தின் உதவி பொறியாளராக வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17 லட்சத்தை புரோக்கர் செல்வகுமார் மூலமாக பணத்தைப் பெற்று ஏமாற்றியுள்ளார். இது தொடர்பாக தமிழ்ச்செல்வன் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

விசாரணை
இந்த மனு மீது விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ், மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு இளமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணி, புரோக்கராக செயல்பட்ட செல்வகுமார் ஆகியோர் பணம் பெற்று ஏமாற்றியது தெரியவந்தது.

முன்ஜாமீன்
இதையடுத்து மணி, செல்வகுமார் ஆகிய 2 பேர் மீது மோசடி மற்றும் ஏமாற்றுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே, இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.. இந்த வழக்கு நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது..

ரத்து ஜாமீன்
காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ்,பணமோசடி செய்த மணி மீது மேலும் பல புகார்கள் வரக்கூடும் என்பதால் இவருக்கு முன்ஜாமின் வழங்ககூடாது என்று தெரிவித்தார்.. இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி முன்னால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சேலம் உதவியாளர் மணியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications