லிஸ்ட் இதோ.. பாஜகவை விட்டு தெறித்து ஓடும் கூட்டணி கட்சிகள்? எஞ்சிய ஒரே பெரிய கட்சி அதிமுகவும் போச்சு
சென்னை: அதிமுக-பாஜக இடையே கூட்டணி முறிந்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அறிவித்துள்ளார். இதுவரை பாஜக கூட்டணி கட்சிகளை எத்தனை மாநிலத்தில் இழந்துள்ளது என்பதை பார்ப்போம்.
அண்ணா குறித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் விமர்சனத்திற்கு இந்த முறை கடுமையான எதிர்வினைகள் அதிமுகவில் இருந்து வந்துள்ளது. அண்ணாமலையின் பேச்சுக்கு சிவி சண்முகம், செல்லூர் ராஜு, ஜெயக்குமார் உள்பட அதிமுகவின் பல்வேறு தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை, முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்தை கடுமையாக விமர்சித்தார். இதனால் அதிமுக- பாஜக இடையே கிட்டத்தட்ட கூட்டணியே முறியும் நிலை இருந்தது.
இந்த சூழலில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. எங்கள் கட்சியின் முடிவைத்தான் நான் அறிவிக்கிறேன். ஜெயலலிதாவை விமர்சித்து மன்னிப்பு கேட்ட நிலையில் அண்ணாமலை, அண்ணாவை விமர்சித்து கொண்டிருக்கிறார். இது எங்கள் தன்மான பிரச்சனை. இனி அதிமுகவினர் பாஜக கூட்டணியை ஏற்க மாட்டார்கள், கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அறிவிப்போம் " என்றார்.
பாஜக தனது கூட்டணி கட்சிகளை பல மாநிலங்களில் இழந்துள்ளது. இதில் முக்கியமான கூட்டணி என்றால் அதிமுக கூட்டணி தான்..அதிமுகதான் பாஜகவின் மிகப்பெரிய கூட்டணி கட்சி. அந்த கட்சியை இப்போது பாஜக கூட்டணியில் இழந்துள்ளது. இதற்கு முன்னதாக குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சியுடனான கூட்டணியை கர்நாடகாவில் இழந்தது. அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து தான் பாஜக கர்நாடகாவில் வளர்ந்தது. ஒருகட்டத்தில் அசுர வளர்ச்சிக்கு பின்னர் ஜனதா தளத்தை கைவிட்டது.
இதேபோல் பீகாரில் நீண்ட நாட்கள் தன்னுடன் கூட்டணியில் இருந்த நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூட்டணியை இழந்தது.அங்கும் பாஜக அசுர வளர்ச்சி அடைந்த நிலையில், அதிர்ச்சி அடைந்த நிதீஷ்குமார், தேர்தலுக்கு பின்னர் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணியில் இணைந்தார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று வந்த பாஜக, ஒரு கட்டத்தில் முதல்வர் பதவி வேண்டும் என்று நிலைப்பாட்டை எடுத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிவசேனா, பாஜகவை கழட்டிவிட்டு காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. கிட்டத்தட்ட இரண்டு வருடம் ஆட்சி தொடர்ந்த நிலையில், சிவசேனா இரண்டாக உடைந்த பின்னரே மீண்டும் மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சியில் அமர்ந்துள்ளது.
ஏற்கனவே உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ், மேற்கு வங்காளத்தில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் ஒரு காலத்தில் கூட்டணியில் இருந்தது. அந்த மாநிலங்களில் வளர்ந்த பின்னர் கூட்டணி முறிந்தது. இதேபோல் ஆந்திராவில் சந்திபாபு நாயுடுவின் தெலுங்கு தேசத்துடன் ஒரு காலத்தில் கூட்டணியில் இருந்தது. ஆனால் முறிந்துவிட்டது. மேகாலயாவில் என்பிபி கட்சியுடன் கூட்டணியை முறித்துவிட்டு தான் கடந்த சட்டசபை தேர்தலில் அங்கு போட்டியிட்டது. ஆனால் தேர்தலுக்கு பின் சேர்ந்து கொண்டது. காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணியை பாஜக முறித்துக் கொண்டது.
இப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த பெரிய கட்சியும் இல்லை. மேகாலயாவில் என்பிபி, புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ், உத்தரப்பிரதேசத்தில் ஏடி(எஸ்), அஸ்ஸாமில் ஏஜிபி, பீகாரில் ஹெச்ஏஎம் உள்பட சுமார் 38 கட்சிகள் கூட்டணியில் உள்ளன. எல்லாமே சரிய கட்சிகள் தான்.இதில் சிவசேனா (பிளவுபட்ட) மட்டுமே சற்று பெரிய கட்சி. பாஜக அதிமுக கூட்டணி முறிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், தேர்தல் நேரத்தில் கூட்டணி கணக்குகள் மாற வாய்ப்பு உள்ளதாகவே சொல்கிறார்கள்,.












Click it and Unblock the Notifications