இவ்வளவு சிம்பிளாகவா? முருகன் கோவிலில் சாதாரணமாக நடந்த கலெக்டர் கல்யாணம்! யார் யார் வந்திருந்தாங்க?
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், மருத்துவர் கௌசிகா ஆகியோரது திருமணம் இன்று திருப்போரூர் முருகன் கோவிலில் மிகவும் எளிய முறையில் நடைபெற்றது. கோவிலில் மிக எளிமையான முறையில் திருமணம் நடைபெற்ற நிலையில் மணமக்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக அருண் ராஜ் பணியாற்றி வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான சமுத்திர பாண்டியனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கும் மேகநாதன் ஜெயந்தி தம்பதியரின் மகளான மருத்துவர் கௌசிகாவுக்கும் இரண்டு மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

தொடர்ந்து இரு வீட்டார் சம்மதத்துடன் இன்று அருண்ராஜ் கௌசிகா ஆகியோரது திருமணம் நடைபெற்றது. காலை ஆறரை - ஏழரை முகூர்த்தத்தில் திருப்போரூர் அருள்மிகு கந்தசுவாமி கோவிலில் உள்ள உற்சவ மண்டபத்தில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.
திருப்போரூர் முருகன் கோவில் அர்ச்சகர்களே இந்த திருமணத்தை நடத்தி வைத்தனர். இந்த விழாவில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தாமோ அன்பரசன், மணமக்களின் நெருங்கிய உறவினர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்.
மாவட்ட ஆட்சியர் என்றாலும் முருகன் கோவிலில் மிக எளிமையாக இந்த திருமணம் நடைபெற்ற நிலையில் பலரும் அதனை ஆச்சரியத்துடன் பகிர்ந்து வருகின்றனர். தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட மக்களும் மாவட்ட ஆட்சியரின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இன்று திருமணம் நடைபெற்ற நிலையில் வரும் வெள்ளிக்கிழமை சென்னை திருவான்மியூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கேடர் ஐஏஎஸ் அதிகாரியான அருண்ராஜ் தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தின் மூன்றாவது ஆட்சியராக பணியாற்றி வருகிறார். 2015 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியர் ஆகவும், பழனியில் சார் ஆட்சியராகவும் பணிபுரிந்தார். தொடர்ந்து நிதி துறையிலும், அதற்குப் பிறகு எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக தற்போது பணியாற்றி வருகிறார். எவ்வித பயிற்சி மையங்களுக்கும் செல்லாமல் முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றவர் அருண்ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications