செங்கல்பட்டு டூ பெருங்களத்தூர்.. சென்னை ஜிஎஸ்டி சாலையில் 15 கி.மீ தூரத்துக்கு ஸ்தம்பித்த வாகனங்கள்
சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த 3 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து, 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒரே நேரத்தில் சென்னை திரும்பியதால் ஜி.எஸ்.டி சாலை வரலாறு காணாத போக்குவரத்து நெரிசலைச் சந்தித்தது. குறிப்பாகச் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி முதல் பெருங்களத்தூர் வரை சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், பயணிகள் சென்னைக்குள் நுழைய 4 மணிநேரத்திற்கும் மேலாகக் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டதாக தெரிகிறது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த விடுமுறை நாட்கள் முடிந்து, லட்சக்கணக்கான மக்கள் மீண்டும் சென்னை திரும்பியதால் ஜி.எஸ்.டி சாலை கடுமையான போக்குவரத்து நெரிசலைச் சந்தித்தது.

செங்கல்பட்டு பரனூர்
குறிப்பாக செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி முதல் பெருங்களத்தூர் வரை நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், பயணிகள் சென்னைக்குள் நுழைய வழக்கத்தை விட கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது.
தேர்தல் நாளன்று வழங்கப்பட்ட பொது விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களைத் தொடர்ந்து, இன்று திங்கட்கிழமை காலை அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இயல்பு நிலைக்கு திரும்பின. இதனால் தென் மாவட்டங்களில் இருந்து ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சென்னை எல்லையைத் தொட்டதே இந்தத் திணறலுக்கு முக்கியக் காரணமாக அமைந்துவிட்டது..
சென்னை கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு
நள்ளிரவு முதல் அதிகாலை வரை கிளாம்பாக்கம் மற்றும் வண்டலூர் பகுதிகளில் வாகனங்கள் மிக மெதுவாகவே ஊர்ந்து சென்றன.. இந்த சூழலை சமாளிக்கத் தமிழக அரசுப் போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.
குறிப்பாக கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து சென்னை நகரின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல மாநகரப் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. மேலும், கிளாம்பாக்கத்தில் இறங்கிய பயணிகள் விரைவாக நகருக்குள் செல்ல ஏதுவாக, ரயில்வே நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து புறநகர் மின்சார ரயில்களின் இயக்கமும் கண்காணிக்கப்பட்டு, கூட்டத்திற்கு ஏற்ப கூடுதல் சேவைகள் வழங்கப்பட்டன.
தாம்பரம் மாநகர காவல் துறை தரப்பில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி போக்குவரத்து மாற்றங்கள் நெரிசலைக் குறைக்க உதவியதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
செங்கல்பட்டு டூ பெருங்களத்தூர் சாலை
செங்கல்பட்டு வழியாக சென்னை வர வேண்டிய கனரக வாகனங்கள் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாகத் திருப்பி விடப்பட்டன. மேலும், சிங்கபெருமாள் கோவில் வழியாக ஒரகடம் சாலைக்கும், சில வாகனங்கள் கிழக்குக் கடற்கரை சாலைக்கும் மாற்றப்பட்டன. இந்த மாற்றுப் பாதைகள் குறித்த அறிவிப்புகள் முன்னதாகவே வழங்கப்பட்டதால், பெரும் வாகன நெரிசல் ஓரளவிற்குப் பரவலாக்கப்பட்டது.
இருந்தாலும் தனியார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் பேருந்து முனையங்களில் ஏற்பட்ட மக்கள் கூட்டத்தால் ஜி.எஸ்.டி சாலையில் இயல்பு நிலை திரும்ப அதிகாலை வரை ஆகிவிட்டது..
வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் சந்திப்புகளில் நூற்றுக்கணக்கான போக்குவரத்து போலீசார் விடிய விடியப் பணியமர்த்தப்பட்டு வாகனங்களைச் சீர் செய்தனர். தேர்தல் முடிந்து மக்கள் பாதுகாப்பாகச் சென்னை திரும்புவதை உறுதி செய்ய அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்ட போதிலும், இதுபோன்ற நெரிசல் காலங்களில் மாற்றுப் பாதைகளை பயன்படுத்துவது அவசியம் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது...!!!












Click it and Unblock the Notifications