மனைவியுடன் ஓடிப் போன ஆட்டோ டிரைவர்.. ஆத்திரத்தில் டிரைவரின் தந்தையை அடித்துக் கொன்ற கணவர்
Recommended Video
சென்னை: குன்றத்தூரில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மகனின் கள்ளக்காதலால் தந்தையை கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.
வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, திருமுடிவாக்கம் சர்வீஸ் சாலையில் கடந்த 21-ஆம் தேதி அழுகிய நிலையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக வந்த தகவலையடுத்து குன்றத்தூர் போலீசார் அந்த சடலத்தை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இறந்தவர் குறித்து விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் ஆட்டோ டிரைவர் சையது இஸ்மாயில் என்பவரை கொலை செய்து திருமுடிவாக்கம் பகுதியில் போட்டு விட்டதாக இரண்டு சுரேந்தர்(என்ற) சிவா(32), அவரது நண்பர் பாலாஜி(32) ஆகிய இருவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இதுகுறித்து குன்றத்தூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அப்போதுதான் இறந்து கிடந்தது சையது இஸ்மாயில் என்றும் மகனின் கள்ளக் காதல் விவகாரத்தால் தந்தை கொலை செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
இருவரும் ஆட்டோ ஓட்டுநர்
இதுகுறித்து குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ் விசாரணை மேற்கொண்டார். இதில் வண்டலூரை அடுத்த கண்டிகை, வேங்கடமங்கலத்தைச் சேர்ந்தவர் சையது இஸ்மாயில் (45). தாம்பரத்தில் ஆட்டோ ஓட்டி வந்தார். இவரது மகன் அசாருதீன்(24), இவரும் ஆட்டோ ஓட்டுநர்.
உல்லாசம்
இந்த நிலையில் கூடுவாஞ்சேரி, நாதன் நகரை சேர்ந்த சுரேந்தரின் மனைவி சுமதி (30) அடிக்கடி தாம்பரம் வரும்போது அசாருதீனின் ஆட்டோவில் செல்வார். இதில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
புகார்
இந்த விஷயம் சுரேந்தருக்கு தெரியவரவே அவர் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் இவர்களுக்கு மிகுந்த இடையூறாக இருந்து வந்ததால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அசாருதீன், சுமதி இருவரும் ஒன்றாக வீட்டை விட்டு சென்று விட்டனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் சுரேந்தர் புகார் அளித்தாக கூறப்படுகிறது.
தவித்து வந்தார்
மேலும் தனது மனைவியும், அசாருதீனும் இருக்கும் இடம் குறித்து அவரது தந்தை சையது இஸ்மாயிலிடம், சுரேந்தர் கேட்டு வந்துள்ளார். அதற்கு சரியான பதில் தராததால் சுரேந்தர் மிகுந்த ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார். பிள்ளைகளும் தனது அம்மா குறித்து கேட்டதால் பதில் ஏதும் கூற முடியாமல் சுரேந்தர் தவித்து வந்துள்ளார்.
ஆட்டோவில் பயணம்
இதையடுத்து தனது மனைவி இருக்கும் இடத்தை எப்படியாவது சையது இஸ்மாயில் வாயில் இருந்து வரவழைக்க வேண்டும் என்று ஒரு முடிவு செய்தார். இதையடுத்து சின்னமலை, வெங்கடாபுரத்தை சேர்ந்த தனது நண்பரான பாலாஜி (32) என்பவரை தாம்பரம் வரவழைத்து மணிமங்கலம் சவாரி செல்ல வேண்டும் என்று கூறி சையது இஸ்மாயில் ஆட்டோவில் வந்துள்ளார்.
கழுத்தை நெரித்துக் கொலை
மணிமங்கலம் நோக்கி ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது அங்கு தயாராக நின்று கொண்டிருந்த சுரேந்தர் ஆட்டோவை மடக்கி தனது மனைவி எங்கு என்று கேட்டுள்ளார். அதற்கு மீண்டும் தெரியாது என சையது இஸ்மாயில் கூறியதால் ஆத்திரமடைந்த சுரேந்தர் அருகில் இருந்த கட்டையை எடுத்து சையது இஸ்மாயில் தலையில் அடித்து கழுத்தை நெரித்துள்ளார்.
விசாரணை
இதில் சையது இஸ்மாயில் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இதையடுத்து இருவரும் சேர்ந்து ஆட்டோவில் சையது இஸ்மாயில் உடலை எடுத்து வந்து திருமுடிவாக்கம் பகுதியில் வீசி விட்டு ஆட்டோவை ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு சென்று இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மனைவி புகார்
இதையடுத்து போலீசார் தங்களை எப்படியும் பிடித்து விடுவார்களோ என்ற பயத்தில் இருவரும் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். மேலும் 19-ம் தேதி முதல் சையது இஸ்மாயில் காணவில்லை என்று தாம்பரம் போலீஸ் நிலையத்தில் அவரது மனைவி புகார் அளித்து இருந்தார். சரண் அடைந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் கொலை செய்யப்பட்டது சையது இஸ்மாயில் என உறவினர்கள் அடையாளம் காட்டியதையடுத்து உறுதி செய்ததாக போலீஸார் தெரிவித்தனர். மகனின் கள்ளக்காதலால் தந்தை கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.