சென்னையில் வாகன சோதனையில் போலீசை தாக்கிய 4 இளைஞர்கள்.. பாய்ந்தது குண்டர் சட்டம்
Recommended Video
சென்னை: நள்ளிரவில் வாகன சோதனையின் போது போலீசாருடன் குடிபோதையில் சண்டையிட்ட இளைஞர்கள் 4 பேரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். குடிபோதையில் திருநங்கைகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 4 இளைஞர்கள், விலக்கிவிட்ட போலீஸ்காரரை தாக்கியதால் அவர்கள் நான்கு பேர் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது.
சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் நுங்கம்பாக்கம் சிக்னல் அருகே கடந்த 13-ம் தேதி நள்ளிரவு பாண்டிபஜார் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக காரில் குடிபோதையில் வந்த இளைஞர்கள், திருநங்கைகளோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவர்களை காவலர் கார்த்திகேயன் எச்சரித்து, அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.
ஆனால் அவர்கள் காரில் திரும்பி வந்து, அங்கிருந்த முதல்நிலைக் காவலர் கார்த்திகேயனை தாக்க முற்பட்டனர். அப்போது அவர்கள் காவலர் கார்த்திகேயனை சீருடையை பிடித்து தரதரவென இழுத்துச்சென்று, வாக்கிடாக்கியை பறித்துச்சென்றதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக வீடியோ ஒன்றும் சமூகவலைதளங்களில் வெளியானது. இதைத்தொடந்து போலீஸ்காரரை தாக்கிய ஏழுகிணறைச் சேர்ந்த அப்சர் உசைன், முகமது ரிஸ்வான், சுலைமான், முகமது நவ்ஷாத் அலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் உள்ளார்கள்.
இதனிடையே சிறையில் உள்ள 4 பேர் மீதும் ஓராண்டு காலம் பிணையில் வெளிவர முடியாதபடி குண்டர் சட்டம் பதிவு செய்யுமாறு சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து இளைஞர்கள் 4 பேர் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது.