யூனிபார்மை கழட்டி விடுவேன்.. போலீசை மிரட்டிய வழக்கறிஞரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை: சென்னை சேத்துபட்டு சிக்னலில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் தனுஜா ராஜனின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்துள்ளதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை சேத்துபட்டு சிக்னலில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் தலைமைக் காவலர் ரஜித்குமார் உள்ளிட்ட காவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.
வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. சுங்கச்சாவடிகளில் வரப்போகுது புதிய நடைமுறை .. என்னனு தெரியுமா?
இ பதிவு இல்லை
அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்றை மறித்து விசாரணை செய்தார்கள். அப்போது இ பதிவு இல்லாமல் ஊரடங்கு விதிகளை மீறி வெளியே சுற்றியதாக சட்டக்கல்லூரி மாணவி ப்ரீத்தி ராஜனுக்கு அபராதம் விதித்தார்கள். உடனே அந்த பெண் நடந்த விஷயத்தை வழக்கறிஞரான தன் தாயிடம் கூறி அங்கு வரவழைத்துள்ளார்.
கடும் வாக்குவாதம்
சொகுசு காரில் விரைந்து வந்த அவரது தாயார் தனுஜா ராஜன், முகக்கவசம் இல்லாமல் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ரசீதை வீசி எறிந்ததுடன், போலீசாரின் யூனிபார்மை கழட்டி விடுவேன் என்று ஒருமையில் பேசினார், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
பின்னர் அங்கிருந்து தனித்தனி கார்களில் புறப்பட்டுச் சென்றனர். அதையடுத்து அவர்கள் இருவர் மீதும் போலீஸார் 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
முன்ஜாமீன் மனு
இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி தாய், மகள் இருவருக்கும் போலீஸார் சம்மன் அனுப்பினர். இதனால், இருவரும் முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நீதிபதி செல்வக்குமார் முன்பாக நடந்தது.
உணர்ச்சி வசப்பட்டு பேசினார்
அப்போது மனுதாரர்கள் தரப்பில், ப்ரீத்தி ராஜன் மீன் வாங்கச் செல்லவில்லை. மருந்து வாங்கச் சென்றவரை போலீஸார் மறித்து அபராதம் விதித்தனர். இதற்காக தனுஜா ராஜன் அது தொடர்பாக விளக்கம் கோரியுள்ளார். போலீஸார் பேசிய மோசமான வார்த்தைகள் எடிட் செய்யப்பட்டு, தனுஜா பேசியது மட்டும் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது. மனுதாரர் உணர்ச்சி வசப்பட்டே அவ்வாறு நடந்துள்ளார். எனவே அவர்களுக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும், என வாதிடப்பட்டது.
தவறான முன்னுதாரணம்
காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளதால் முன் ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி செல்வகுமார், இதுபோன்ற ஒரு சம்பவத்தில் முன்ஜாமீன் வழங்கினால் தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும். மேலும் வழக்கறிஞரின் செயல்பாடு சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதால் முன்ஜாமீன் வழங்க முடியாது எனக்கூறி மனுக்களை தள்ளுபடி செய்தார்.