சென்னை ஆர்கே நகரில் அதிமுக நிவாரண உதவி நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிறுமி பலி? உறவினர்கள் மறியல்
சென்னை: சென்னை ஆர்கே நகரில் அதிமுக நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி சிறுமி உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை முழுவதுமே வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டது. வட சென்னை பகுதிகளில் ஒன்றான ஆர்கே நகர், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை , மணலி உள்பட பல்வேறு பகுதிகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட கருணாநிதி நகர் 3-வது தெருவில் வசித்து வருபவர் வேலு. இவர் மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி சொக்கம்மாள். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இதில் மூத்த மகள் யுவஸ்ரீ (வயது 14) அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், அதிமுக சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் சனிக்கிழமை நடந்தது.
இந்த வெள்ள நிவாரண வாங்குவதற்காக சிறுமி யுவஸ்ரீ நேற்று வரிசையில் காத்திருந்தார். அப்போது, அதிகளவு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி சிறுமி யுவஸ்ரீ மயங்கியதாக உறவினர்கள் சொல்கிறார்கள். உடனடியாக சிறுமியை மீட்ட பொதுமக்கள் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியில் சிறுமி யுவஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுதொடர்பாக சென்னை ஆர்.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரேத பரிசோதனைக்காக சிறுமி யுவஸ்ரீ உடலை கொண்டு சென்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் வலிப்பு ஏற்பட்டு சிறுமி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதாக சொல்கிறார்கள். பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே இறப்புக்கான காரணங்கள் தெரிய வரும் என்று போலீசார் கூறினார்கள்.
இதற்கிடையில், சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டும், அதிமுகவினர் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியும் சிறுமியின் உறவினர்கள், இந்திய ஜனநாயக மாணவர் சங்கத்தினர் ஏராளமானோர் சனிக்கிழமை மாலை ஆர்.கே.நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
இதுதொடர்பாக உறவினர்கள் கூறும் போது, அதிமுகவினர் வழங்கிய வெள்ள நிவாரணப்பொருட்கள் வாங்கு ஆயிரத்துக்கும் அதிகமானோர் காத்திருந்தனர். அப்போது, வரிசையில் நின்றுகொண்டிருந்த , பலர் திடீரென முந்தி செல்ல முயன்றனர். யுவஸ்ரீ கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது. பல் உடைந்தது. ரத்தம் வடிந்த நிலையில் இறந்து போனார். எனவே அஜாக்கரதையாக செயல்பட்ட அதிமுகவினர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றார்கள்.












Click it and Unblock the Notifications