ஒரே நேரத்தில் சாலையில் குவிந்த 20,000+ வாகனங்கள்! சென்னை ஏர் ஷோ.. வீடு திரும்ப முடியாமல் மக்கள் அவதி
சென்னை: மெரினாவில் ஏர் ஷோ மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. ஆனாலும், அதைக் கண்டுகளித்த மக்களால் இப்போது வீடுகளுக்குத் திரும்ப முடியவில்லை. ஒரே நேரத்தில் மக்கள் வீடு திரும்புவதால் சென்னையில் பல சாலைகளில் டிராபிக் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலையே இப்போதும் இருப்பதால் டிராபிக் பாதிப்பு சரியாக இன்னும் சில மணி நேரம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய விமானப் படை 92 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அதைக் கொண்டாடும் வகையில் சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இன்று காலை 11 மணிக்கு இந்த விமான சாகச நிகழ்ச்சிகள் தொடங்கிய நிலையில், மதியம் 1 மணி வரை இது நடந்தது. இந்த விமான சாகச நிகழ்ச்சிகளை தமிழக ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கண்டு களித்தனர். பொதுமக்களும் இதைக் காண மெரினாவில் குவிந்தனர். 15க்கும் மேற்பட்ட சாமியானா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
மிகச் சிறப்பாக நடந்து முடிந்த இந்த விமான சாகச நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் திரண்டனர். சுமார் 15 லட்சம் பேர் இந்த விமான சாகச நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தனர். சாகச நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடந்து முடிந்தாலும் அதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக இல்லை என்று மக்கள் குமுறுகிறார்கள். சாகச நிகழ்ச்சிகள் முடிந்து 2 மணி நேரம் ஆகிவிட்ட போதிலும் கடற்கரை ஓட்டியுள்ள பல பகுதிகளில் டிராபிக் குறையவே இல்லை.
இன்று காலை மக்கள் 7 மணி முதலே மெல்ல வந்ததால் பெரியளவில் கூட்ட நெரிசல் சாலைகளில் ஏற்படவில்லை. ஆனால், இப்போது ஏர் ஷோ முடிந்து மக்கள் ஒரே நேரத்தில் திரும்புவதால் கூட்ட நெரிசல் மிக மோசமாக உள்ளது. குறிப்பாக மெரினா லூப் சாலை, காமராஜர் சாலையிலேயே பல நூறு வாகனங்கள் டிராபிக் நெரிசலில் சிக்கியுள்ளன.
சேரா, சோழா, பாண்டியா.. வானில் சங்கம் அமைத்து “சர்க்கஸ்”.. “புயல்” வேக சாகசம் காட்டும் விமானங்கள்!
பல இடங்களில் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதே தெரியவில்லை. சில இடங்களில் போக்குவரத்து போலீசாரும் போதியளவில் இல்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் தன்னார்வலர்களே போக்குவரத்தைச் சரி செய்ய வேண்டிய சூழலும் உள்ளதாகக் கூறப்படுகிறது. திருவல்லிக்கேணி, மந்தைவெளி பகுதிகளிலும் சாலையில் வாகனங்கள் அணி வகுத்து நிற்கிறது. குறிப்பாக ராதாகிருஷ்ணன் சாலையில் மட்டும் 3 கிமீ தூரத்திற்கு வாகனங்கள் நிற்பதைப் பார்க்க முடிகிறது.
உழைப்பாளர் சிலையில் இருந்து சேப்பாக்கம் மைதானம் வரையிலான சுமார் 700 மீட்டரை கடக்கவே ஒரு மணி நேரம் ஆகிறது. 20 ஆயிரம் கார், 50 ஆயிரம் பைக் மேல் சாலையில் நிற்பதால் எங்குத் திரும்பினாலும் டிராபிக் நெரிசல் தான் இருக்கிறது. ஏர் ஷோ முடிந்தவுடன் ஒரே நேரத்தில் மக்கள் திரும்பும் நிலையில், கூட்டத்தால் சென்னை ஸ்தம்பித்து நிற்கிறது.
வங்கக் கடலை மிஞ்சிய மக்கள் கடல்.. விமான சாகசத்தை காண மெரினா பீச்சில் குவிந்த மக்கள்.. உலக சாதனை!
சென்னை மெரினாவை இணைக்கும் பல சாலைகளில் டிராபிக் பாதிப்பு இருக்கிறது. மத்திய கைலாஷ், கிண்டி, அண்ணா சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை, ஈசிஆர், அடையாறு பூந்தமல்லி நெடுஞ்சாலை, ராஜாஜி சாலை எனப் பல இடங்களில் பல கிமீ தூரத்திற்கு வாகன நெரிசல் உள்ளன. இதனால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
மெரினா அருகே உள்ள பெரும்பாலான இடங்களில் இதே நிலை இருக்கிறது. டிராபிக் சரியாகக் குறைந்தது சில மணி நேரமாவது ஆகும் என்றே தெரிகிறது. கூட்ட நெரிசல் கருதி சென்னை மெட்ரோ 3.5 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும் போதிலும், சொந்த வாகனங்களில் வந்தோர் வீடு திரும்ப முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications