அதிகாலையிலேயே.. சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை.. செம்ம கிளைமேட்
சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் இதமான சூழல் நிலவுகிறது. பொதுவாக பிப்ரவரி மாதத்தில் மழை பெய்வது இயல்பான ஒன்று அல்ல. வழக்கத்திற்கு மாறாக சென்னையில் மழை பெய்து வருகிறது.
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் நிலவும் சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று முதல் 22-ந்தேதி வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
அதன்படி சென்னையில் நேற்று காலை ஒரு சில இடங்களில் மிதமான சாரல் மழை பெய்தது. சென்னை கோடம்பாக்கம், வடபழனி, நுங்கம்பாக்கம், வேப்பேரி, புரசைவாக்கம், திருவொற்றியூர் உள்ளிட்ட சென்னையின் சில இடங்களில் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை முதலே சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. வடபழனி, முகப்பேர், கிண்டி, மதுரவாயல், ஆலப்பாக்கம், விருகம்பாக்கம், போரூர், அசோக்நகர், கோயம்பேடு, கோடம்பாக்கம், வடபழனி உள்பட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. திருவான்மியூர், தாம்பரம் உள்பட பகுதிகளிலும் மழைபெய்து வருகிறது. சென்னை தவிர செங்கல்பட், விழுப்புரம் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனிடையே கனமழையால் சென்னையில் குளிர்ந்த காற்றும், இதமான சூழலும் நிலவுகிறது. இந்த திடீர் கனமழையால் சென்னைவாசிகள் திக்குமுக்காடி போய் உள்ளனர்.