தொடர் கனமழை.. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து
சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் நாளைய செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று அதிகாலையில் இருந்தே கனமழை கொட்டி வருகிறது. இடையிடையே கனமழையும், தொடர்ந்து விடாமல் மிதமான மழையும் பெய்து வருகிறது.

சென்னை அருகே மையம்
இதனால் இன்று காலையில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் கடும் அவதியடைந்தனர். மழைகளில் நனைந்தபடியே சிலர் செல்வதையும் பார்க்க முடிந்தது. நேற்று இரவே டிட்வா புயல் வலுவிழந்தது என்பதாலும் இனி கனமழை இருக்காது எனவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று இரவு முதலே மழை பெய்யத் தொடங்கியது.
டிட்வா புயல் வலுவிழந்தாலும், தொடர்ந்து சென்னைக்கு அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மையம் நிலை கொண்டுள்ளதால் இன்று சென்னை மற்றும் திருவள்ளூரில் அதி கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் நாளையும் சென்னை, திருவள்ளூரில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது.
அதி கனமழை எச்சரிக்கை
ஏற்கனவே மழை பெய்து பல்வேறு இடங்கள் தண்ணீரில் தத்தளிக்கும் சூழலில், இன்று அதிகனமழை எச்சரிக்கையும், நாளை கனமழை எச்சரிக்கையையும் விடப்பட்டுள்ளதால் நாளை பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைப்பு
கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக, நாளை 2 ஆம் தேதி நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறாது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications