மயிலாப்பூர் ஆடிட்டர் தம்பதி கொலை.. என்ன நடந்தது? கைதானவர்களை பண்ணை வீட்டுக்கு கூட்டிச்சென்று விசாரணை
சென்னை: மயிலாப்பூரை சேர்ந்த ஆடிட்டர் தம்பதி கொலை வழக்கில் கைதான கிருஷ்ணா, ரவிராய் ஆகியோரை நெமிலிச்சேரி பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாப்பூரில் உள்ள பிருந்தாவன் நகரில் வசித்து வந்தவர் ஆடிட்டர் ஸ்ரீகாந்த் (60). இவரது மனைவி அனுராதா (55). இவர்கள் கடந்த மாதம் அமெரிக்காவில் உள்ள தங்கள் மகள் சுனந்தாவைப் பார்க்க சென்றுவிட்டு கடந்த மே 7 ஆம் தேதி அதிகாலை சென்னை விமான நிலையத்துக்கு திரும்பியுள்ளனர்.
இவர்களை வீட்டுக்கு அழைத்து வர ஸ்ரீகாந்தின் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வரும் நேபாளத்தைச் சேர்ந்த கிருஷ்ணா விமான நிலையம் சென்றுள்ளார்.

செல்போன் ஸ்விட் ஆஃப்
இந்த நிலையில் அமெரிக்காவில் இருக்கும் மகள் சுனந்தா, பெற்றோர் வீடு போய் சேர்ந்துவிட்டார்களா என்பதை தெரிந்துகொள்ள இருவரையும் செல்போனில் தொடர்பு கொண்டபோது இருவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த மகள் சுனந்தா அடையாறில் உள்ள தனது உறவினரான திவ்யாவுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே, திவ்யா தனது கணவர் ரமேஷுடன் ஸ்ரீகாந்த் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார்.
Recommended Video

ரத்தக்கறை
அப்போது வீடு பூட்டப்பட்டிருந்தது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டிற்குள் ரத்தக்கறைகள் தென்பட்டுள்ளன. அதிச்சியடைந்த அவர்கள் உடனே மயிலாப்பூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஆடிட்டர் ஸ்ரீகாந்த்துக்கு ஈ.சி.ஆர். நெமிலிச்சேரியில் பண்ணை வீடு இருப்பதை அறிந்தனர்.

பண்ணை வீட்டில் குழி
அங்கு சென்று ஆய்வு செய்தபோது வீட்டிற்கு அருகே புதிதாக குழி தோண்டப்பட்டிருந்ததை கண்டு சந்தேகம் அடைந்தனர். அதை தோண்டியபோது ஸ்ரீகாந்த் மற்றும் மனைவி அனுராதா உடல்கள் அதில் புதைக்கப்பட்டிருந்தன. சந்தேகமடைந்த போலீசார் ஓட்டுநர் கிருஷ்ணாவை தேடி வந்தனர். தீவிர விசாரணையின் முடிவில் கிருஷ்ணாவும் அவரது நண்பர் ரவியும் ஆந்திர மாநிலம் ஓங்கோல் அருகே பிடிபட்டனர்.

நகை, பணத்துக்காக கொலை
அவர்களிடம் நடத்திய விசாரணையில், பணத்துக்கு ஆசைப்பட்டு இருவரையும் மயிலாப்பூர் வீட்டில் கொலை செய்துவிட்டு ஈசிஆரில் உள்ள பண்ணை வீட்டில் புதைத்ததையும், பல லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்ததையும் ஒப்புக்கொண்டனர். இதனை அடுத்து கொலை செய்யப்பட்ட கணவன், மனைவி உடல்களை மீட்டு மஹாபலிபுரம் போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

பண்ணை வீட்டில் விசாரணை
கைது செய்யப்பட்ட ஓட்டுநர் கிருஷ்ணா மற்றும் அவரது நண்பர் ரவி ராயை 5 நாள் காவலில் எடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று ஈ.சி.ஆர். பண்ணை வீட்டுக்கு இருவரையும் அழைத்துச் சென்ற போலீசார் ஆடிட்டர் தம்பதியை கொன்று புதைத்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தினர்.












Click it and Unblock the Notifications