சென்னை கார் டிரைவரின் வங்கிக் கணக்கில் திடீரென விழுந்த ரூ 9000 கோடி டெபாசிட்! அப்புறம்தான் ட்விஸ்ட்
சென்னை: சென்னையை சேர்ந்த கார் ஓட்டுநரின் வங்கிக் கணக்கில் ரூ 9 ஆயிரம் கோடி டெபாசிட் ஆகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்காரபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கோடம்பாக்கத்தில் தங்கி கார் ஓட்டுநராக இருந்து வருகிறார்.அதிலும் வாடகை கார் ஓட்டிவருகிறார். இவருக்கு ஸ்டேட் பேங்கில் வங்கிக் கணக்கு இருக்கிறது.

இந்த கணக்கில் வெறும் ரூ 105 மட்டுமே பேலன்ஸாக இருந்த நிலையில் திடீரென அவருடைய வங்கிக் கணக்கில் செப்டம்பர் 9ஆம் தேதி மாலை 3 மணிக்கு ரூ. 9000 கோடி பேலன்ஸ் இருப்பதாக எஸ்எம்எஸ் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் இது சைபர் மோசடி கும்பலின் வேலையாக இருக்கும் என நினைத்து பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இந்த நிலையில் இதில் உள்ள சைபர்களை கூட எண்ண முடியாமல் தவித்து வந்தார். வெறும் 105 ரூபாய் இருந்த கணக்கில் எத்தனையோ சைபர் கொண்ட பணம் வந்திருக்கிறதே இது உண்மையா என்பதை அறிய தனது நண்பரின் வங்கிக் கணக்கிற்கு ரூ 21 ஆயிரம் அனுப்பி சோதனை செய்துள்ளார் ராஜ்குமார்.

அவர் அனுப்பியபடி நண்பருக்கு 21 ஆயிரம் ரூபாய் கிரெடிட் ஆனது. இதனால் பணம் எப்படி வந்தது என தெரியாமல் அவர் தவித்த நிலையில் ரூ 9000 கோடியை தவறுதலாக டெபாசிட் செய்துவிட்டதாக தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் இருந்து ராஜ்குமாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த நிலையில் தூத்துக்குடியில் இருந்து பேசிய தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி அதிகாரிகள் அந்த பணத்தை செலவு செய்ய வேண்டாம் என ராஜ்குமாரிடம் கூறினர். அப்போது அவர் ரூ 21 ஆயிரம் தனது நண்பருக்கு அனுப்பியதாக தெரிவித்திருந்தார்.
இதையடுத்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அந்த பணத்தை அவருடைய நண்பர் செலவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என தெரிவித்திருந்தனர். மேலும் ராஜ்குமாரை வங்கி அதிகாரிகள் சிலர் போலீஸுக்கு போவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சென்னை திநகரில் உள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கிக்கு தனது வழக்கறிஞரை அழைத்துக் கொண்டு சென்று ராஜ்குமார் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
மேலும் அதிக பணம் இருப்பதால் தனக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதால் தானும் காவல் துறையில் புகார் அளிப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து அவரை தொடர்பு கொண்ட வங்கி அதிகாரிகள் அந்த 21 ஆயிரம் பணத்தை கழித்துக் கொண்டு மீதமுள்ள பணத்தை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி ஊழியர்கள் திரும்ப எடுத்துக் கொள்வதாக தெரிவித்துவிட்டு அவருக்கு கார் வாங்க கடன் அளிப்பதாகவும் சமரச பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். இதனால் ராஜ் குமார் மகிழ்ச்சியாக உள்ளார்.












Click it and Unblock the Notifications