சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் தவிப்பு.. எல்பிஜி கேஸ் தட்டுப்பாட்டால் மணிக்கணக்கில் காத்திருப்பு!
சென்னை: சென்னையில் ஆட்டோ எல்பிஜி எரிவாயு கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஆட்டோ ஓட்டுநர்கள் 3 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து, நிரப்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தங்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால், கேஸ் சிலிண்டர், ஆட்டோ எல்பிஜி எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதற்கிடையில், வாகனங்களுக்கான எல்பிஜி, சிஎன்ஜி எரிவாயு கிடைக்காததால், ஓட்டுநர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

சென்னை நகரில் பல்லாயிரக்கணக்கான ஆட்டோக்கள், கால் டாக்சிகள் எல்பிஜி மற்றும் சிஎன்ஜி எரிவாயுவை பயன்படுத்துகின்றன. தற்போது எல்பிஜி எரிவாயு தட்டுப்பாட்டால், பல்வேறு தனியார் ஆட்டோ எரிவாயு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
சைதாப்பேட்டை, கிண்டி. சிஐடி நகர் உள்பட சில இடங்களில் திறக்கப்பட்டுள்ள எல்பிஜி எரிவாயு நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து நிரப்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சிஐடி நகரில் 2 கி.மீ. தூரத்துக்கு 3 மணி நேரமாக நீண்ட வரிசையில் காத்திருந்து, எல்பிஜி நிரப்பி செல்லும் நிலைக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
சென்னையில் ஆட்டோ, கார் ஆகியவற்றுக்கு நிரப்பப்படும் கேஸ் நிரப்பும் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து, ஆட்டோ ஓட்டுநர்கள் கூறுகையில், "ஏற்கனவே ஆட்டோ எரிவாயு தட்டுப்பாட்டால், ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, பெரும்பாலான நிலையங்களில் எல்பிஜி எரிவாயு கிடைக்காததால், ஓட்டுநர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு, உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. இந்தப் பிரச்சனைக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும்" எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும், "குறிப்பாக காலை நேரங்களில் தான் அதிக சவாரி கிடைக்கும். ஆனால் அந்த சமயத்தில் தான் அதாவது காலையில் தான் பங்க்குகளில் கேஸ் கிடைக்கிறது. மதியத்திற்கு மேல் கிடைப்பதில்லை. இதனால் சவாரியை விட்டுவிட்டு காலையில் எல்பிஜி நிரப்ப செல்ல வேண்டி உள்ளது. இதனால் எங்களுக்கு கிடைக்க கூடிய வருமானம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது" எனக் கூறுகின்றனர்.
மேலும் தேர்தலுக்கு முன்பு கூட கேஸ் கிடைத்தது என்றும் தேர்தல் முடிந்ததுமே கேஸ் கிடைக்கவில்லை என்றும் புலம்புகின்றனர். இஸ்ரேல் - ஈரான் போருக்கு முன்னால் 50 ரூபாய்க்கு கிடைத்த கேஸ் தற்பொழுது விலை அதிகரித்து 90, 100 என ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு வகையில் விற்கப்படுகிறது எனக் குற்றம்சாட்டுகின்றனர்.
இது குறித்து, இந்திய எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், "இந்திய எண்ணெய் நிறுவனங்களில் போதுமான அளவு எரிவாயு கையிருப்பு உள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் கீழ் செயல்படும் எரிவாயு நிரப்பும் மையங்களுக்கும் போதுமான அளவு கேஸ் வழங்கப்படுகிறது. வாகன ஓட்டிகள் தங்களுக்குரிய வாகனங்களில் போதுமான அளவு கேஸ் நிரப்பி கொள்ளலாம்.
ஆட்டோக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடப்பதற்கு காரணம் பல தனியார் கேஸ் நிரப்பும் நிலையங்களில், எரிவாயு இல்லாமல் இருப்பதுதான். அத்துடன், கேஸ் தட்டுப்பாடு காரணமாக, ஒருசில கேஸ் நிரப்பும் மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனால், ஒட்டுமொத்தமாக அனைவரும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நடத்தும் மையங்களை தேடி ஒரே நேரத்தில் செல்வதால், நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது." எனத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications