Chennai: சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! எப்போது தான் பயன்பாட்டுக்கு வரும்? மத்திய அரசு கொடுத்த புதிய அப்டேட்
பெங்களூர்: சென்னையிலிருந்து பெங்களூருக்கும் (Chennai Bangalore Expressway), பெங்களூரிலிருந்து சென்னைக்கும் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வேலை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்காக பயணம் செய்து வரும் நிலையில், இரு நகரங்களுக்கிடையேயான போக்குவரத்தை துரிதப்படுத்தும் நோக்கில் ரூ.15,000 கோடி மதிப்பில் அமைக்கப்படும் சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் வே சாலை திட்டம் 2026 மார்ச் மாதத்திற்குள் முழுமையாக முடித்து பயன்பாட்டிற்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆசியாவின் டெஸ்ட்ராய்டு என்று அழைக்கப்படும் சென்னையில் இருந்து பெங்களூருக்கு தினமும் பல லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். அதேபோல் பெங்களூரில் இருந்து மருத்துவம், கல்வி, தொழில் என பல்வேறு காரணங்களுக்காக பயணிகள் பெருமளவு வந்து செல்கிறார்கள். இதனால், சென்னை - பெங்களூர் இடையேயான போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது.

சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலை
இதன்படி, சென்னை - பெங்களூர் இடையே சுமார் ₹15 ஆயிரம் கோடி செலவில் புதிய எக்ஸ்பிரஸ் சாலையை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான கட்டுமானத்தை பிரதமர் மோடி கடந்த 2022ம் ஆண்டு தொடங்கி வைத்தார். 2023ம் ஆண்டு இறுதியிலேயே இந்தப் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், இந்த சாலை பணிகள் முழுவதுமாக முடிவதில் இன்னும் தாமதம் நீடித்துக்கொண்டே செல்கிறது.
சென்னையிலிருந்து பெங்களூருக்கு இயக்கப்படும் ரயில்கள், பேருந்துகள் உள்ளிட்டவற்றில் பயணிகள் கூட்டம் அலைமோதுவதை பார்க்க முடியும். இந்த சாலை பயன்பாட்டிற்கு வந்தால், இரு நகரங்களுக்கிடையேயான பயண நேரம் 6 மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 262 கிலோமீட்டர் தொலைவு கொண்ட பெங்களூர் - சென்னை இடையே அதிக அளவில் சரக்கு போக்குவரத்தும் நடைபெறுகிறது.
மார்ச் மாதத்துக்குள் முடிவடையும்
இந்த சாலை பயன்பாட்டுக்கு வந்தால் சரக்குகளின் போக்குவரத்தும் எளிதாகும் என்பதால், பயணிகள் எக்ஸ்பிரஸ் வே சாலை எப்போது முழுமையாக திறக்கப்படும் என ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர். இந்த நிலையில், சென்னை - பெங்களூர் சாலை பணிகள் வரும் அக்டோபர் 2025 முதல் மார்ச் 2026 க்குள் முடிந்து பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
போக்குவரத்து மேலாண்மை அமைப்பு
நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை இது பற்றிப் பெங்களூர் மத்திய தொகுதி எம்.பி. பி.சி. மோகன் கேள்வி ஒன்றை எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, "சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ் வே சாலை டிசம்பர் 2025 மற்றும் மார்ச் 2026 க்கு இடைப்பட்ட காலத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எக்ஸ்பிரஸ் வே சாலை இரு நகரங்களுக்கு இடையேயான தொலைவை குறைப்பதோடு வேகமாக கடக்க உதவும். இதனால், சரக்கு போக்குவரத்து செலவு குறையும்" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "பெங்களூர் - ஹைதராபாத் (512 கிலோமீட்டர்) மற்றும் பெங்களூர் - புனே (700 கிலோமீட்டர்) என மேலும் இரு எக்ஸ்பிரஸ் வே சாலைகள் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இந்த எக்ஸ்பிரஸ் வே சாலை, போக்குவரத்து மேலாண்மை அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்படும்" என்றார்.
தாமதத்திற்கான காரணங்கள் என்ன?
நிலம் கையகப்படுத்துதல், இழப்பீடுகளை தாமதமாக அளித்தல், முக்கியமான கட்டமைப்புகளை வேறு இடத்திற்கு மாற்றுவது போன்ற பணிகளால் கர்நாடக பகுதியில் தாமதம் ஏற்பட்டதாகவும், ஆந்திராவில் கவுண்டின்யா வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகிலுள்ள பணிகளுக்கான ஒப்புதல்கள் பின்னடைவுகளை ஏற்படுத்தின. தமிழ்நாடு பகுதியிலும் ஒப்புதல் பெறுவதில் தாமதம், நிதி இடையூறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் தாமதமானதாகவும் தெரிவித்தார்.
சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ் வே சாலையில் கர்நாடக பகுதியில் பணிகள் முடிந்து அதிகாரப்பூர்வமற்ற முறையில் வாகன போக்குவரத்துக்கு சாலை திறக்கப்பட்டுள்ளது. எனினும், தமிழகம் மற்றும் ஆந்திராவில் சாலை பணிகள் முடியாததால், எக்ஸ்பிரஸ் வே சாலை முழுவதுமாக பயன்பாட்டுக்கு வரவில்லை.












Click it and Unblock the Notifications