வேளச்சேரி -பரங்கிமலை பறக்கும் ரயில் நாளை தொடக்கம்.. சென்னை மக்கள் அறிய வேண்டிய அட்டவணை
சென்னை: வேளச்சேரி -பரங்கிமலை இடையே கடந்த 11ம் தேதி பறக்கும் ரயில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனுமதி சான்றிதழ் கிடைக்காததால் தொடங்கிவைக்கப்படவில்லை.. தற்போது தற்காலிக அனுமதி சான்றிதழ் கிடைத்துள்ளதால், நாளை பறக்கும் ரயில் சேவை தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் பரங்கிமலை வரை எத்தனை ரயில் சேவை, வேளச்சேரி வரை எத்தனை ரயில் சேவைகள், வேளச்சேரி -பரங்கிமலை இடையே எத்தனை ரயில் சேவைகள் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. முழு அட்டவணை நாளை வெளியாகும் என்கிறார்கள்.
சென்னைவாசிகளின் 18 வருட கனவான வேளச்சேரி - பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் இணைப்பு மார்ச் 14ம் தேதியான நாளை தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

சோதனை
இந்த வழித்தடத்தில் பல்வேறு சோதனைகள் மற்றும் சவால்களை கடந்து பணிகள் முடிக்கப்பட்டது. அண்மையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பயணிகள் ரயிலை இயக்கி பாதுகாப்பு சோதனை செய்தார். அதற்கு முன்பாக சரக்கு ரயில்கள் இயக்கி சோதனை செய்யப்பட்டது. தற்போது அனைத்து சோதனைகளும் முடிந்து, தற்காலிக பாதுகாப்பு சான்றிதழ் கிடைத்துவிட்டது. இதுதான் இந்த திட்டத்தின் ஆகச்சிறந்த முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு சான்றிதழ்
ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மார்ச் 5 அன்று புதிய பாதையில் ஆய்வு மேற்கொண்டார். அதில் திருப்தி அடைந்த அவர், மார்ச் 11 அன்று இந்த வழித்தடத்தில் ரயில்களை இயக்க தற்காலிக அனுமதியை வழங்கினார். இதன்படி ஆரம்பத்தில் ரயில்கள் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் மட்டுமே இயக்கப்பட வேண்டும் (வழக்கமான வேகத்தை விட இது குறைவு).
முடிக்க வேண்டிய பணிகள்
அதேபோல் சில பணிகளை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதாவது ஆதம்பாக்கம் மற்றும் புழுதிவாக்கம் நிலையங்களில் எஸ்கலேட்டர்கள், லிஃப்ட் மற்றும் குடிநீர் வசதி போன்ற சில பணிகளை வரும் மே 15-க்குள் முடிக்க நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது. எனவே அதிகாரப்பூர்வமாக மார்ச் 14 அல்லது 15-ம் தேதி முதல் ரயில்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பரங்கிமலை வரை 43 ஜோடி ரயில்கள்
இதுவரை சென்னை கடற்கரையிலிருந்து புறப்படும் ரயில்கள் வேளச்சேரியுடன் நின்றுவிடும். இனிமேல் 43 ரயில்கள் கடற்கரையிலிருந்து வேளச்சேரி வழியாக பரங்கிமலை வரை நீட்டிக்கப்படும். அதேபோல் பரங்கிமலையிலிருந்து 43 ரயில்கள் கடற்கரைக்குத் திரும்பும். எனவே நீங்கள் மயிலாப்பூர் அல்லது திருவான்மியூரிலிருந்து நேரடியாக பரங்கிமலை சென்று, அங்கிருந்து மெட்ரோ ரயில் அல்லது செங்கல்பட்டு செல்லும் புறநகர் ரயில்களுக்கு எளிதாக மாற முடியும்.
வேளச்சேரி வரை இரண்டு ரயில்கள்
அதேபோல் வழக்கம் போல கடற்கரையிலிருந்து வேளச்சேரி வரை மட்டுமே இரண்டு ரயில்கள் செல்லும். இவை பரங்கிமலை வரை செல்லாது, வேளச்சேரியுடன் தனது பயணத்தை முடித்துக் கொள்ளும். இது போன்ற 2 ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
'ஷட்டில்' சேவைகள்
அதேபோல் 3 ஜோடி ரயில்கள் 'ஷட்டில்' சேவைகள் ரயில்களாக இயக்கப்படுமாம். இந்த 3 ரயில்கள் கடற்கரை வரை செல்லாமல், வெறும் வேளச்சேரி மற்றும் பரங்கிமலை ஆகிய இரண்டு நிலையங்களுக்கு இடையே மட்டும் முன்னும் பின்னுமாக இயக்கப்படும் என்கிறார்கள். அப்படி இயக்கப்பட்டால், ஆதம்பாக்கம் மற்றும் புழுதிவாக்கம் பகுதி மக்கள் வேளச்சேரி செல்வதற்கும் அல்லது பரங்கிமலை ரயில் நிலையத்தை அடைவதற்கும் இது மிகவும் உதவியாக இருக்கும்.
நாளை புதிய அட்டவணை வருகிறது
இதன் காரணமாக வேளச்சேரி, ஆதம்பாக்கம் மக்கள் இனி பஸ் அல்லது ஆட்டோவை நம்பி இருக்காமல் நேரடியாக எழும்பூர் அல்லது செங்கல்பட்டு செல்லும் ரயில்களைப் பிடிக்க பரங்கிமலைக்கு போக முடியும். அதேபோல் பரங்கிமலையில் பறக்கும் ரயில், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில் என மூன்றுமே ஒரே இடத்தில் சந்திப்பதால் பயண நேரம் பெருமளவு குறையும். அதேபோல் வேளச்சேரி-விமான நிலையம் செல்லும் உள்வட்டச் சாலையில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது. நாளை (மார்ச் 14) புதிய அட்டவணை குறித்து முழு தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம், வேளச்சேரி - பரங்கிமலை இடையேயான MRTS இரண்டாம் கட்டப் பாதையைத் தொடங்குவதற்கான தற்காலிக அங்கீகாரச் சான்றிதழை (Provisional Authorisation Certificate), ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையரிடமிருந்து பெற்றுள்ளது.
இந்த நீட்டிக்கப்பட்ட பாதையில் ரயில் சேவைகள் 2026, மார்ச் 14 முதல் தொடங்கும். இது புறநகர் ரயில் இணைப்பை மேம்படுத்துவதோடு, பரங்கிமலையில் (St. Thomas Mount) புறநகர் ரயில் மற்றும் சென்னை மெட்ரோ ஆகியவற்றுடன் தடையற்ற ஒருங்கிணைப்பை உறுதி செய்யும்.
இந்த மைல்கல் சாதனை, சென்னையின் நகர்ப்புற ரயில் கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும், அன்றாடப் பயணிகளின் வசதியை மேம்படுத்துவதிலும் ஒரு முக்கியப் படியாகும்" இவ்வாறு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications