சென்னை பீச் - தாம்பரம் ரூட் பயணிகளே அலர்ட்! ஒரு வாரத்துக்கு இந்த டைமிங்கில் மின்சார ரயில் சேவை ரத்து
சென்னை: இன்று புதன்கிழமை (14 ஆம் தேதி) முதல் 18 ஆம் தேதி வரையில் நள்ளிரவு 12.10 முதல் காலை 4.30 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என்றும், சில ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
சென்னையில் பயணிகளின் போக்குவரத்து தேவையை தீர்த்து வைப்பதில் மின்சார ரயில்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. புறநகரில் இருந்து சென்னைக்குள் வந்து செல்ல மின்சார ரயில்களையே பயணிகள் பெரிதும் நம்பியுள்ளனர். டிராபிக் நெரிசல் இன்றி சரியான நேரத்தில் ரயிலில் வந்து விட முடியும் என்பதால் பயணிகள் அதிக அளவில் மின்சார ரயில்களை பயன்படுத்துவதை பார்க்க முடியும்.

சென்னை மின்சார ரயில் ரூட்களில் சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வழித்தடத்தில் அதிக அளவிலான பயணிகள் பயன்படுத்துகிறார்கள். ஒரு சில நிமிடங்கள் ரயில்கள் வர தாமதம் ஆனாலும் கூட ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். பயணிகளின் பாதுகாப்பிற்காவும், ரயிலை பாதுகாப்பாக இயக்கவும் அவ்வப்போது பரமாரிப்பு பணிகளை தெற்கு ரயில்வே மேற்கொள்வது வழக்கம்.
பயணிகளுக்கு பெரிதும் பாதிப்பு இன்றி இரவு நேரங்கள், விடுமுறை நாட்களில் இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. அந்த வகையில், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் உள்ள சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது.
அதாவது இன்று புதன்கிழமை (14 ஆம் தேதி) முதல் 18 ஆம் தேதி வரையில் நள்ளிரவு 12.10 முதல் காலை 4.30 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும், சில ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்படவும் உள்ளதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
சென்னை கடற்கரையில் இருந்து இன்று (புதன்கிழமை) முதல் 17 ஆம் தேதி வரை இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதே தேதிகளில், தாம்பரத்தில் இருந்து இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல, சென்னை கடற்கரையில் இருந்து இன்று (புதன்கிழமை) முதல் 18 ஆம் தேதி வரை அதிகாலை 4.15 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படும். அதே நாட்களில் , தாம்பரத்தில் இருந்து அதிகாலை 4.15 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படும்.
அதேபோல செங்கல்பட்டில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில் இன்று முதல் 17 ஆம் தேதி வரை எழும்பூர் - சென்னை கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டு, எழும்பூரில் நிறுத்தப்படும். அதே நாள்களில், சென்னை கடற்கரையில் இருந்து அதிகாலை 3.55 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில், சென்னை கடற்ரை - எழும்பூர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக எழும்பூரில் இருந்து புறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. எனவே பயணிகள் இதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக தங்கள் பயணத்தை திட்டமிட்டுக்கொள்வது அவசியம்..












Click it and Unblock the Notifications