“டக் அவுட்” ஆன ரோகித்.. திடீர் டிரெண்டான சென்னை சிறுவன்! சொன்னது என்ன? சிஎஸ்கே VS எம்ஐ பரிதாபங்கள்
சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை - மும்பை அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் ரோகித் ஷர்மா டக் அவுட் ஆக வேண்டும் என சென்னை அணியின் ரசிகரான ஒரு சிறுவன் பேட்டியளித்த நிலையில் அது நிறைவேறி இருக்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்றைய போட்டியில் பலரும் எதிர்பார்த்த சென்னை மற்றும் மும்பை அணிகள் விளையாடி வருகின்றன. ஐபிஎலில் அதிக விக்கெட்டுகளை கொண்ட இரு அணிகள் மோதும் போட்டியான இது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை பார்த்தாக வேண்டும் என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் வேக வேகமாக டிக்கெட்டுகளை வாங்கித் தீர்த்தனர்.

இன்று மாலை போட்டி தொடங்குவதற்கு பல மணி நேரங்களுக்கு முன்பாகவே மைதானத்திற்கு அருகில் கூடிய ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என மகிழ்ந்தனர். அப்போது மைதானத்திற்கு வெளியில் நின்றுகொண்டு இருந்தவர்களிடம் தனியார் தொலைக்காட்சி பேட்டி எடுத்தது. அப்போது பேசிய ஒரு சிறுவன் தற்போது பிரபலமாகி இருக்கிறார்.
சென்னையின் ரசிகரான அந்த சிறுவன் பேசுகையில், "இன்று மும்பை - சென்னை அணிகளுக்கும் இடையேயான போட்டியில் நிறைய சிக்சர்கள் வரும். அதை எல்லாம் பார்க்கலாம். இன்றும் ரோகித் ஷர்மா டக் அவுட் ஆனால் நல்லா இருக்கும். அடுத்து சென்னை இன்று போட்டியில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்க வேண்டும்." என்று கூறினார்.
இந்த நிலையில் போட்டி மழையால் பாதிக்கப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில், இதில் டாஸ் வென்று சென்னை அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி ஆரம்பத்திலேயே ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. தொடக்க வீரர்களான கேமரான் கிரீன் 6 ரன்களிலும், இஷான் கிஷன் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இன்று 3 வது வீராக களமிறங்கிய கேப்டன் ரோகித் ஷர்மா, ஏபிடி வில்லியர்ஸ்போல் 360 டிகிரியில் விளையாட முயன்று தீபக் சஹார் ஓவரில் ஸ்லிப் திசையில் நின்றுகொண்டிருந்த ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து மீண்டும் பூஜ்ஜியம் ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை ரோகித் ஷர்மா படைத்து உள்ளார்.

மும்பை அணி இதில் 20 ஓவர்களில் வெறும் 138 ரன்களை மட்டுமே சேர்த்தது. அதிகபட்சமாக அந்த அணியின் இளம் வீரர் நேஹல் வதேரா 64 ரன்களை குவித்தார். மற்ற வீரர்கள் எல்லாம் சொற்ப ரன்களையே எடுத்தனர். சென்னை அணியின் பந்துவீச்சாளர்களை பொருத்தவரை, அதிகபட்சமாக மதீஷா பதிரானா 2 விக்கெட்டுகளையும் தீபக் சஹார் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோ தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தற்போது எளிதான இலக்கை நோக்கி சென்னை அணி பேட்டிங் செய்து வரும் நிலையில், ரோகித் ஷர்மா டக் அவுட் ஆக வேண்டும் என்று சொன்ன சிறுவனின் வீடியோ அதிகளவில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. சிறுவனின் ஆசையை ரோகித் ஷர்மா நிறைவேற்றிவிட்டதாக அவரை கலாய்த்து பலர் பதிவிட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications