பாரம் தாங்க முடியாமல் சரியும் கட்டிடங்கள்.. மண்ணில் புதையும் சென்னை! உஷார் மக்களே!
சென்னை: கடந்த 2013ம் ஆண்டு மும்பையில் ஒரு அபார்ட்மென்ட் இடிந்து விழுந்ததில் 61 பேர் உயிரிழந்தனர். அதேபோல 2019ல் கர்நாடகாவில் தார்வாடில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 19 பேர் பலியாகினர். நிலநடுக்கமோ, மண் சரிவோ, கனமழையோ இந்த கட்டிட விபத்துக்கு காரணம் கிடையாது. மாறாக கட்டிடங்களின் பளு தாங்காமல், பூமியில் ஏற்பட்ட புதைவுதான் இதற்கு காரணம். சென்னையிலும் இதுபோன்று நடக்க கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கின்றனர்.
'Nature Sustainability' எனும் ஆங்கில இதழில் இது தொடர்பான கட்டுரை வெளியாகியிருக்கிறது. அதில் இந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்ததற்கான காரணங்கள் விளக்கப்பட்டிருக்கின்றன.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "கட்டிடங்கள் சரிவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. நிலநடுக்கமும், மண் சரிவும் வெளியில் தெரிந்த காரணங்கள். ஆனால் சீரற்ற நிலநடுக்கம், கட்டிடங்கள் முறையாக பராமரிக்கப்படாதது, சரியாக கட்டிடங்களை கட்டாதது போன்றவையும் சரிவுக்கான காரணம். அதேபோல மற்றொரு காரணம் நிலத்தடி நீரை அதிக அளவில் பயன்படுத்துவதாகும். இதை ஆய்வாளர்கள் நீர்ப்பாசன சுருக்கம் என்று சொல்கிறார்கள். நிலத்தடி நீருக்கான தேவை அதிகரிப்பதால் பலரும் ஆழ்துளை கிணறு அமைக்கிறோம்.
இப்படி செய்வதால் நிலத்தடியின் நீர் மட்டம் குறையும். நிலத்திற்கு அடியில் டேங்க் போன்ற அமைப்பில் நீர் இருக்கும். இந்த டேங்க் நீர் காலியாகிவிட்டால் அந்த டேங்க் காலியாக இருக்கும். நிலத்திற்கு மேலே கட்டிடங்கள் இருப்பதால், அதன் அழுத்தம் காரணமாக டேங்க் முற்றிலும் நசுங்கிவிடும். இதனால் இந்த இடத்தில் மீண்டும் நிலத்தடி நீர் உருவாகாது. அதேபோல கட்டிடங்கள் திடீரென இடிந்து விழுவதற்கும் இந்த டேங்குகள் காலியாவதுதான் காரணம். இதைத்தான் நீர்ப்பாசன சுருக்கம் என்று சொல்கிறார்கள்.
இந்தியாவில் சுமார் 20 கோடி பேர் நகரங்களில் வசிக்கிறார்கள். நகர மக்களின் நீர் தேவை, ஆழ்துளை கிணறுகள் மூலமாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் மற்றும் சென்னையில் மட்டும் 8.30 கோடி பேர் வசிக்கின்றனர். இந்த நகரங்கள் இன்னும் பெரியதாக வளரும். 2030ல் டோக்கியோவை விட பெரிய நகரமாக டெல்லி வளரும். இந்த வளர்ச்சி நீர் தேவையை அதிகரிக்கும். இது சங்கிலி தொடர் போல செயல்படும். நகரங்களில் மக்கள் தொகை அதிகரிப்பது, நீர் தேவை உயர்வது, ஆழ்துளை கிணறுகளின் எண்ணிக்கை அதிகரிப்பது, நீர் காலியாவது என்று தொடர்ந்து நடக்கும்போது இந்த நகரங்களில் உள்ள கட்டிடங்கள் இடிந்து விழும்.
குறிப்பாக சென்னையை பொறுத்தவரை, வளசரவாக்கம், கோடம்பாக்கம், ஆலந்தூர் மற்றும் தண்டையார்பேட்டை போன்ற பகுதிகள் மிகுந்த ஆபத்தில் இருக்கின்றன. இதில் கே.கே.நகர் மற்றும் தண்டையார்பேட்டை பகுதியில் நிலத்தடி நீர் அதிகம் உறிஞ்சப்படுகிறது. இந்த நிலைமை இதேபோல நீடித்தால், அடுத்த 50 ஆண்டுகளில் மேற்குறிப்பிட்ட 5 நகரங்களில் 23,529 கட்டிடங்கள் நிலத்தடியில் மூழ்கும். சென்னையில் 958 கட்டிடங்கள் உடனடி ஆபத்தில் இருக்கின்றன.
கடந்த 2015-2023 வரை எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களை கொண்டு ஆய்வு செய்தபோது, ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 4 மி.மீ அளவுக்கு நிலம் புதைவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது." என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications