இவங்கதான் அந்த 3 பேர்.. சென்னையை அதிரவைத்த செயின் பறிப்பு.. கொள்ளையர்கள் போட்டோவை வெளியிட்ட போலீசார்
சென்னை: சென்னையில் நேற்று தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 கொள்ளையர்களின் புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது. ஜாபர் குலாம், மிசம மஜாதுஷ்மேசம், சல்மான் உசேன் ஆகிய 3 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் ஜாபர் குலாம் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சென்னையில் நேற்று (மார்ச் 25) ஒரே நாளில் ஏழு இடங்களில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவங்கள் பெரும் பரபரப்பையும், மக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியது. ஈஞ்சம்பாக்கம் பெத்தேல்நகர், அடையாறு சாஸ்திரி நகர், அடையாறு இந்திரா நகர், கிண்டி எம்ஆர்சி உள்ளிட்ட பகுதிகளில் இந்த செயின் பறிப்புச் சம்பவங்கள் நடைபெற்றன.

நேற்று காலை 6 முதல் 7.10 மணிக்குள் சுமார் ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து மூதாட்டிகளை குறிவைத்து நடைபெற்ற தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள் சென்னை நகரத்தையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கின.
குற்றவாளிகளை பிடிக்க காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில், தென் சென்னை கூடுதல் காவல் ஆணையர் கண்ணன், இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி மேற்பார்வையில் அடையாறு காவல் மாவட்ட துணை ஆணையர் பொன் கார்த்திக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் செயின் பறிப்பு நடைபெற்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் துப்புத் துலக்கி வந்தனர்.
கொள்ளையில் ஈடுபட்டவர்கள் சென்னை விமான நிலையம் நோக்கிச் சென்றது சிசிடிவி காட்சிகள் வாயிலாக தெரியவந்த நிலையில், ஹைதராபாத், மும்பைக்கு செல்ல இருந்த விமானங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு 2 இளைஞர்களை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் தான் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் எனத் தெரியவந்தது. இதேபோல ரயில் மூலம் தப்பிச் சென்ற மற்றொரு கொள்ளையனை ஆந்திரா அருகே ஓடும் ரயிலில் மடக்கி போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், இந்த தொடர் செயின் பறிப்பு சம்பவங்களுக்கு மூளையாகச் செயல்பட்ட ஜாபர் குலாம் ஹுசைன் என்ற நபர் இன்று அதிகாலை போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் உயிரிழந்தார். விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்ட இவர், விசாரணையில் தரமணி ரயில் நிலையம் அருகே நகைகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
பதுக்கி வைத்திருந்த நகைகளை மீட்க போலீசார் ஜாபர் குலாம் ஹுசைனை அங்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவர் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் பலியாகியுள்ளார்.
சென்னையில் அடுத்தடுத்து 6 இடங்களில் பெண்களை குறிவைத்து தங்க சங்கிலியைப் பறித்த 3 கொள்ளையர்களின் புகைப்படங்கள் காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளன. ஜாபர் குலாம், மிசம மஜாதுஷ்மேசம், சல்மான் உசேன் ஆகிய 3 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் ஜாபர் குலாம் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த கும்பல் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை அன்று சென்னையை அடுத்த தாம்பரம் பகுதியில் இதேபோல் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டு பின்னர் விமானத்தில் தப்பிச் சென்றனர் என்பதும், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் ஜாபர் மீது 50க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications