ஒரு குழந்தை ரூ.13 லட்சம்.. Whats app-இல் புகைப்படம், சான்றிதழுடன் விற்பனை.. சென்னையில் ஷாக்
சென்னை: சென்னை புழல் பகுதியில் 2.5 வயது குழந்தையை கடத்தி விற்பதாக எழுந்த புகாரில் வித்யா என்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த சில வாரங்களாக சென்னையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் இந்த கும்பலின் நடவடிக்கையை கண்காணித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். வாட்ஸப்பில் குழந்தைகளின் படங்களை அனுப்பி, சராசரியாக ரூ.13 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளனர். இந்த வழக்கில் மேலும் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து இந்த கும்பல் குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்த கார்த்திக் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இதற்கு முன்பு நான் மூலக்கடை பகுதியில் இருந்தேன். இப்போது புழல் வந்து இரண்டு மாதங்களாகிவிட்டன. ரியல் எஸ்டேட் துறையில் ஒருத்தர் பழக்கமானார். அவர் கடந்த திங்கள் கிழமை எனக்கு அழைத்து, வித்யா என்ற என்னுடைய தோழி வாட்ஸப் மூலம் குழந்தை விற்பனை செய்கிறேன் என்கிறார். எனக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. என்று பகிர்ந்தார்.

நான் சமீபத்தில் குழந்தை கடத்தல் பற்றி ஒரு படம் பார்த்திருந்தேன். இருப்பினும் எனக்கு அது தேவையில்லை என்று நினைத்தேன். அடுத்தநாள் காலை என் மகனுக்கு தலையில் லேசாக அடிபட்டு ரத்தம் வந்தது. அது என்னை மிகவும் பாதித்தது. இவர்கள் குழந்தை கடத்தும் கும்பலோ.. இதற்கு முன்பு எவ்வளவு குழந்தைகளை கடத்தியிருப்பார்கள் என்று யோசித்தேன்.
அப்போது நான் என் நண்பருக்கு அழைத்து, குழந்தை வாங்க ஆள் இருக்கிறது. அவருக்கு வயது 50 ஆகிவிட்டது. குழந்தை இல்லை. என்று பேச கூறினேன். அவரும் பேசினார். அதற்கு அந்த வித்யா குழந்தை என்று கூட சொல்லவில்லை. என்னிடம் புரோடெக்ட் உள்ளது. மெட்டீரியல் உள்ளது என்று கோட்வேர்டை பயன்படுத்தினார். குழந்தை என்று அவர் வாயில் இருந்து வார்த்தை வரவில்லை.
1 மாதம், 3 மாதம், 6 மாதம் என்று வயது வாரியாக குழந்தைகளை போட்டோ எடுத்து அனுப்பியுள்ளார். அவர் வாட்ஸப்பில் போட்டோ அனுப்பும் குழந்தைகள் அன்றைய தினம் மாலைக்குள் விற்பனையாகிவிடுகிறது. கடைசியாக 2.5 வயது குழந்தைக்கு ரூ.12 லட்சம் விலை என்று கூறினார்கள். அவர்களை 5 நாள்கள் பின்தொடர்ந்தபோது 3 குழந்தைகளின் புகைப்படங்களை அனுப்பினார்கள்.
அவர்களை தீவிரமாக கண்காணித்து பிடிக்க முடிவு செய்தேன். அதற்காக தொடர்ந்து பேச்சு கொடுத்துக் கொண்டே இருந்தேன். குழந்தைகளின் போட்டோ அனுப்பும்போது, அரசு சான்றிதழுடன் அனுப்புகிறார்கள். கடைசியாக 2.5 வயது குழந்தையின் போட்டோ அனுப்பினார்கள். எனக்கு 2 வயதில் மகன் உள்ளார். அதனால் தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்தோம்.
ஒரு குழந்தைக்கு ரூ.13 லட்சம் விலை பேசி பிரிட்டானியா நகர் பகுதிக்கு வர சொன்னார்கள். குழந்தைகளுக்கு வரும்போது புதிய பால் பாட்டில் வாங்கி, அதில் பாலும் எடுத்து வாருங்கள் என்று கூறினார்கள். எனக்கு பேச்சே வரவில்லை. கண்ணீர் தான் வந்தது. உங்களுக்கு எத்தனை குழந்தை வேண்டும். ரெடி செய்து தருகிறோம் என கூறுகிறார். அங்கு நான் காவல்துறையுடன் சென்றபோது செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டனர்.
எப்படியோ காவல்துறையினர் அவர்களை பிடித்துவிட்டனர். ஒவ்வொரு குழந்தைக்கும் 12-13 லட்சம் ரூபாய் விலை நிர்ணயித்துள்ளனர். ரூ.10 லட்சம் பார்டிக்கும் 2 லட்சம் அவர்கள் கமிஷனாகவும், ரூ.1 லட்சம் இதர செலவாகும் வைத்துள்ளனர். சென்னையில் மையப் பகுதியில் இவர்கள் எப்படி இயங்கினார்கள் என தெரியவில்லை. அனைத்து ஆவணங்களையும் காவல்துறையில் ஒப்படைத்துள்ளேன். காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.












Click it and Unblock the Notifications