சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?
சென்னை சென்ட்ரலில் நிற்கும் இந்த கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் - தமிழகத்தின் தொழில்மையப் பகுதிகள் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பயணிகளை ஏற்றிச் செல்லும் தெற்கு ரயில்வேயின் மிக அதிக வரவேற்பு பெற்ற ரயில் சேவைகளில் ஒன்று என நெகிழ்ச்சியாக தெற்கு ரயில்வே தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. தெற்கு ரயில்வே சொன்னது போல் கோவை சென்னை வந்தே பாரத் என்பது தெற்கு ரயில்வேயின் பொன் முட்டையிடும் வாத்து.. ஆனால் ஏன் 8 பெட்டியை 16 பெட்டியாக மாற்றவில்லை என்ற கேள்வி எழாமல் இல்லை
தெற்கு ரயில்வே வெளியிட்ட பதிவில், "சென்னையிலிருந்து கோவைக்கு மக்கள் மிகவும் நேசிக்கும் ரயில் - இதற்கான காரணம் ரகசியமானது அல்ல!

சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரலில் நிற்கும் இந்த கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் - தமிழகத்தின் தொழில்மையப் பகுதிகள் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பயணிகளை ஏற்றிச் செல்லும் தெற்கு ரயில்வேயின் மிக அதிக வரவேற்பு பெற்ற ரயில் சேவைகளில் ஒன்றாகும்.
தொழிலதிபர்கள் முதல் தினசரி அலுவலகம் செல்வோர் வரை, மாணவர்கள் முதல் குடும்பங்கள் வரை - வாரத்தில் ஆறு நாட்கள் சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய நகரங்களைச் சென்னைக்கு மிக நெருக்கமாக இணைத்து, இது அனைவருக்கும் ஒரு பாலமாகச் சேவை செய்து வருகிறது." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதிவினை பார்த்த கோவை மக்கள் பலர், கோவை வந்தே பாரத்திற்கு தான் இவ்வளவு வரவேற்பு இருக்கிறது என்று உங்களுக்கே தெரிகிறது அல்லவா... அப்புறம் ஏன் 8 பெட்டியை 16 பெட்டியாக மாற்றவில்லை என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். வந்தே பாரத் ரயில்களில், ரயில்வே வாரியம் நேரடியாகத் தரும் லாப விவரங்களை விட, 'ஆக்கிரமிப்பு விகிதம்' மற்றும் 'டிக்கெட் வருவாய்' ஆகியவற்றை கணக்கிட்டால் உண்மை நிலவரம் தெரியும். அந்த வகையில் கோவை வந்தே பாரத் ரயிலின் நிவரம் பற்றி பார்ப்போம்.
கோவை - சென்னை வந்தே பாரத் ரயில் 2023-ல் தொடங்கப்பட்டாலும், கடந்த ஓராண்டில் தெற்கு ரயில்வேயின் பொன்முட்டையிடும் வாத்தாக இது மாறியுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 3.2 லட்சம் முதல் 3.5 லட்சம் பயணிகள் இந்த ரயிலில் பயணித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சென்னை கோவை வந்தே பாரத் ரயிலின் ஆக்கிரமிப்பு விகிதம் தொடர்ந்து 100% முதல் 105% வரை உள்ளது. அதாவது, ஒரு இருக்கை கூட காலியாக இருப்பதில்லை; ஒரு நிலையத்தில் இறங்கும் பயணிகளுக்குப் பதில் அடுத்த நிலையத்திலேயே புதிய பயணிகள் ஏறிவிடுகிறார்கள்.
ரயில்வேக்கு கிடைத்த லாபம் என்று பார்த்தால் ஒரு பயணத்திற்கு (இருபுறமும் சேர்த்து) சுமார் ₹12 லட்சம் முதல் ₹15 லட்சம் வரை வருவாய் கிடைத்திருக்கும் என்கிறார்கள். ஓராண்டு கணக்கில் பார்த்தால், இந்த ஒரு ரயிலின் மூலம் மட்டும் தெற்கு ரயில்வேக்கு சுமார் ₹40 கோடி முதல் ₹45 கோடி வரை நிகர வருவாய் கிடைத்திருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். ஏனெனில் வழக்கமான ரயில்களின் பராமரிப்புச் செலவுகளை விட வந்தே பாரத் ரயிலின் பராமரிப்பு செலவு குறைவு, அதேநேரம் லாப விகிதம் இதில் மிக அதிகம் ஆகும். எனவே தான் சென்னை கோவை வந்தே பாரத் ரயிலில் பெட்டிகளை 16 பெட்டிகளாக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. வெறும் 6 மணி நேரத்தில் கோவையில் இருந்து சென்னை செல்ல முடிவதால் இதற்கு வரவேற்பு அதிகமாக உள்ளது.












Click it and Unblock the Notifications