சென்னை டிராபிக் போலீஸ் மர்ம மரணம்.. 'டீசல் திருட சொல்லி டார்ச்சர் செஞ்சாங்க'.. ஆடியோவால் பரபரப்பு
சென்னை: சென்னை ராயபுரம் போலீஸ் குவாட்டர்ஸில் டிராபிக் போலீஸ்காரர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் உயிரிழப்பதற்கு முன்னர் வெளியிட்டதாக கூறப்படும் ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் போக்குவரத்து உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர் ஆகியோர் தன்னை டார்ச்சர் செய்ததாக ஆடியோவில் உள்ளது.
சென்னை ராயபுரத்தில் உள்ள போலீஸ் குவாட்டர்ஸில் வசித்து வந்த போலீஸ்காரர் லோகேஷ் (38). இவருக்கு ஷாலினி என்ற மனைவியும், மகனும், மகளும் உள்ளனர். அமைந்தகரை, மணலி, எண்ணூர் உட்பட பல காவல் நிலையங்களில் லோகேஷ் வேலை பார்த்து வந்தார். அவர் கடைசியாக கோட்டை போக்குவரத்து காவல் பிரிவில் பணியாற்றினார்.
அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் லோகேஷ் மருத்துவ விடுப்பில் இருந்திருக்கிறார். இதனால் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு பெரவள்ளூர் காவல் நிலையகுற்றப்பிரிவுக்கு அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டாராம். அதற்கான உத்தரவை பெற்றுக்கொள்ளவில்லை என தெரிகிறது. பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி டிஜிபியிடம், அவரது மனைவி ஷாலினி மூலம் மனு அளித்திருந்ததாக சொல்லப்படுகிறது.

போலீஸ்காரர் மரணம்
இந்நிலையில், கடந்த 5-ம் தேதி வீட்டிற்குள் பாத்ரூம் கதவை பூட்டிவிட்டு உள்ளே சென்ற லோகேஷ் வெளியே வரவில்லை, சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் கதவை உடைத்து சென்று பார்த்தபோது லோகேஷ் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த ராயபுரம் காவல் நிலைய போலீசார் லோகேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

டார்ச்சர் செய்தாங்க
இதனிடையே போலீஸ்காரர் லோகேஷ் உயிரிழப்பதற்கு முன்னதாக காவல் துணை ஆணையர் ஒருவருக்கு அனுப்பியதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில்,லோகேஷ் கூறியுள்ளதாவது: கோட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளர் கருணாகரன் என்னை தனிப்பட்ட முறையில் பழிவாங்குகிறார். மன உளைச்சல் கொடுக்கிறார். எனக்கு வேறு வழியில்லை. குடும்பத்தினருடன் உங்கள் அலுவலகம் முன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன். நான் எந்த தவறும் செய்யவில்லை. போக்குவரத்து காவல் ஆய்வாளர் கருணாகரன் மற்றும் உதவி ஆய்வாளர் ஒருவர் ஜாதி ரீதியாக என்னை டார்ச்சர் செய்தாங்க..

திருட சொன்னாங்க
அதனால்தான் மருத்துவ விடுப்பு எடுத்திருந்தேன். நான் மருத்துவ விடுப்பு முடிந்து வருவதற்கு முன்னரே என்னை பணியிட மாறுதல் செய்து விட்டார்கள் நான் இறந்துவிட்டால் ஆய்வாளர் கருணாகரன், உதவி ஆணையர் சம்பத் பாலன் இருவரையும் விட மாட்டேன். நான் பணியிலிருந்தபோது ஆய்வாளர் கருணாகரன் வாரத்தில் ஒருநாள் 100 லிட்டர் டீசல் திருடசொன்னார். உதவி ஆணையருக்கு 20 லிட்டர், 80 லிட்டர் அவருக்கு திருடி கொடுக்க சொன்னார். நான் செய்யவில்லை. இதனால், என்னை பழிவாங்குகிறார்.

சம்பாதிக்க முடியல
தினமும் என் வீட்டுக்கு 4 போலீஸாரை அனுப்பி தொந்தரவு கொடுத்து வந்தாங்க. போக்குவரத்து ஆய்வாளர் நீலாங்கரையில் இருக்கும்போது தினமும் 15 ஆயிரம் சம்பாதித்தாராம். தற்போது அவ்வளவு பணம் சம்பாதிக்க முடியவில்லையாம். உதவி ஆணையர் சம்பத் பாலனுக்கு மாதம் ரூ.5 லட்சம் வருகிறது. போக்குவரத்து காவல் ஆய்வாளருக்கு ரூ.1.5 லட்சம் வருகிறது. குமார் இதை வசூலித்து கொடுக்கிறார். விதி மீறல் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் மிஷினில் முறைகேட்டில் ஈடுபடுறாங்க.." இவ்வாறு அந்த ஆடியோவில் காவலர் லோகேஷ் கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சென்னை ராயபுரம் போலீஸ் குவாட்டர்ஸில் டிராபிக் போலீஸ்காரர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அதிகாரிகள் 'டார்ச்சர்' செய்ததாக ஆடியோ வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications