தண்டையார்பேட்டை குவாரன்டைன் வீடுகளின் கதவை தட்டிய மாநகராட்சி ஊழியர்.. கதவை திறந்தால்.. செம!
சென்னை: வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு பிரியாணி வழங்கி சென்னை மாநகராட்சி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கத்தை கொண்டு நோயாளிகள் மருத்துவமனைகள், வீடுகளில் தங்கி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். கொரோனா உறுதியானவர்கள் மருத்துவமனைகளிலும், கொரோனா இருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர்கள், கொரோனா சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியவர்கள் வீட்டிலும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு வீடுகளில் தங்கி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் மன நல ஆலோசனை வழங்கப்படுகிறது. இந்த மருத்துவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களுடன் பேசிவருகிறார்கள்.

பிறந்தநாள்
இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் உள்ள ஆலோசனை மையத்தை அண்மையில் ஒரு பெண் தொடர்பு கொண்டார். அப்போது அவர் எனக்கு இன்று பிறந்தநாள். ஆனால் நான் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் எனக்கு யாருமே வாழ்த்து கூறவில்லை என கவலை தெரிவித்தார்.

3 இளைஞர்கள்
இதையடுத்து அந்த ஆலோசனை மையத்தில் இருந்த அனைவரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார்கள். அது போல் சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 இளைஞர்களிடம் மாநகராட்சி ஆலோசனை மையத்திற்கு அழைப்பு வந்தது.

மாநகராட்சி
அப்போது ஊழியர் ஒருவர் அவர்களை எப்படி உள்ளீர்கள், உடல்நலம் எல்லாம் சுகமா என கேட்டுள்ளார். ஆனால் அவர்களோ நாங்கள் நன்றாக சாப்பிட்டே ரொம்ப நாள் ஆகிறது என்றனர். இந்த நிலையில் நேற்று மதியம் அவர்களுடைய செல்போனிற்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய மாநகராட்சி ஊழியர், வீட்டுக் கதவை திறக்குமாறு தெரிவித்தார்.

இன்ப அதிர்ச்சி
கதவை திறந்ததும் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி. ஆம்.. சூடான பிரியாணிகளையும் மற்ற உணவுகளையும் அவர்களிடம் கொடுத்தார். கொரோனா நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கும் மாநகராட்சியின் மனநல மையம் இவ்வாறு இன்ப அதிர்ச்சியையும் தருவது நெகிழ்ச்சியை அளிப்பதாக அவர்கள் கூறினர்.












Click it and Unblock the Notifications