பெண் அதிகாரிக்கு மிரட்டல்.. திமுக கவுன்சிலர் மீது சாட்டையை சுழற்றிய துரைமுருகன்
சென்னை: சென்னை மாநகராட்சி திமுக 144வது வார்டு கவுன்சிலராக இருந்தவர் ஸ்டாலின். இவர் அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரருக்கும் மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது. அதுகுறித்து அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்த நிலையில், எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. அதனடிப்படையில் திமுக தலைமையும் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
திமுக சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் 144வது வட்ட செயலாளராக இருப்பவர் ஸ்டாலின். இவர் சென்னை பெருநகர மாநகராட்சி 14வது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார். இந்நிலையில் மதுரவாயில், விஜிபி, அமுதா நகர் கூவம் அருகே கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. சென்னை குடிநீர் வாரியம் இந்தப் பணிகளை கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் செய்து வருகிறது.

நாகராஜன் என்பவர் இந்தப் பணிகளுக்கான ஒப்பந்தம் எடுத்துள்ளார். கடந்த சில வாரங்களாக ஸ்டாலின் அந்த இடத்தில் எந்தப் பணியும் செய்யக் கூடாது என்று ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது.,
தனது ஆதரவாளர்கள் மூலமாகவும், ஸ்டாலினே நேரடியாகவும் தொலைபேசி மூலமாகவும் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் நாகராஜனுக்கு தொடர்ந்து மிரட்டல் வந்துள்ளதாக புகார் எழுந்தது. தனக்கு ரூ.10 லட்சம் கொடுத்தால் மட்டுமே பணியை தொடர முடியும் என்றும், இல்லையென்றால் பணியை தொடர முடியாது என்றும் ஸ்டாலின் மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியானது.
இது சென்னை மாநகராட்சி மற்றும் திமுக வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தப் பிரச்னை தொடர்பாக சென்னை குடிநீர் வாரிய செயற்பொறியாளர் மகாலட்சுமி, உதவி செயற்பொறியாளர் கலைச்செல்வி ஆகியோர் கோயம்பேடு காவல்நிலையத்தில் ஸ்டாலின் மீது புகார் அளித்துள்ளனர்.
அந்தப் புகாரின் அடிப்படையில் கோயம்பேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் திமுக கவுன்சிலர் ஸ்டாலின் மீதான புகார் உண்மை என்று தெரியவந்தது. இதையடுத்து, அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுப்பது மற்றும் மிரட்டல் விடுப்பது ஆகிய பிரிவுகளின் கீழ் ஸ்டாலின் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தப் பிரச்னை குறித்து திமுக தலைமையிடமும் புகார் சொல்லப்பட்டது. ஸ்டாலின் மீதான புகார் உறுதி செய்யப்பட்டதால் திமுகவும் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில், சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் 144வது வட்டச் செயலாளரும், சென்னை மாநகராட்சி கவுன்சிலருமான ஸ்டாலின் கழக கட்டுப்பாட்டை மீறி, கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால், அவரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார். என்று துரைமுருகன் கூறியுள்ளார். ஆளுங்கட்சி கவுன்சிலரே, அதிகாரிகளுக்கு பணம் கேட்டு மிரட்டிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications