சென்னையில் 9 இடங்களில் வணிக வளாகங்கள், கடைகளை திறக்க அனுமதி.. எந்தெந்த இடங்கள்?.. முழு விவரம்!
சென்னை: சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் 9 இடங்களில் வணிக வளாகங்கள், அங்காடிகள் திறக்க தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் நாளை முதல் மீண்டும் திறக்க சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வந்தது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கையும், கடுமையான ஊரடங்குமே கொரோனாவை குறைத்தது. ஆனால் மக்கள் கொரோனா தடுப்பு முறைகளை முன்பற்றாததால் தமிழ்நாட்டில் கொரோனா மீண்டும் சற்று அதிகரித்தது.

சென்னையில் கொரோனா
கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டல பகுதிகளிலும் பாதிப்பு அதிகரித்தது. சென்னையை பொறுத்தவரை பாதிப்பு மீண்டும் அதிகரித்தது. சில குறிப்பிட்ட பகுதிகளில் அதிக அளவில் கூட்டம் சேருவது தொடர்ந்து காணப்பட்டால் அப்பகுதி மாவட்ட ஆட்சியர்கள் / மாநகராட்சி ஆணையர்கள், காவல் துறையினர் அப்பகுதியை மூடும் நடவடிக்கைகளை பொதுமக்கள் நலன்கருதி முடிவு செய்யலாம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

ரங்கநாதன் தெரு, புரசைவாக்கம்
இதனை தொடர்ந்து கடந்த 30-ம் தேதி சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள 9 இடங்களான ரங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் இரயில் நிலையம் வரை, புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் புருக்லின் சாலை வரை, ஜாம் பசார் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை, ஃபக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜார், என்.எஸ்.சி. போஸ் சாலை குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை, இராயபுரம் மார்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை வரை வணிக வளாகங்கள், கடைகள் திறக்க ஆகஸ்டு 9-ம் தேதி வரை திறக்க அனுமதி மறுக்கப்பட்டது.

அமைந்தகரை மார்க்கெட்
இதேபோல் வாட்டர் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோவில் வரை அமைந்தகரை மார்கெட் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ திரு.வி.க.நகர் பூங்கா சந்திப்பு வரை மற்றும் ரெட்ஹில்ஸ் மார்கெட் பகுதியில் ஆஞ்சநேயர் சிலை முதல் அம்பேத்கர் சிலை வரை ஆகிய பகுதிகளில் உள்ள வணிகவளாகங்கள் மற்றும் அங்காடிகள திறக்க ஆகஸ்டு 9-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டு இருந்தது.

வணிக வளாகங்கள் திறக்க அனுமதி
இந்த நிலையில் மேற்கண்ட 9 இடங்களில் அங்காடிகள், வணிக வளாகங்களை திறக்க விதிக்கப்பட்டு இருந்த தடை நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில் இந்த இடங்களில் அங்காடிகள், வணிக வளாகங்களை நாளை முதல் மீண்டும் திறக்க சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் கடைகள், வணிக வளாகங்களில் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இந்த பகுதிகளில் கடைகள், வணிக வளாகங்கள் திறக்கும் நேரம் குறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications