கொரோனா வீட்டுத் தனிமையில் இருக்கீங்களா... மருத்துவ ஆலோசனை பெற தொலைபேசி எண்கள்
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சென்னை மாநகராட்சியில் வீட்டில் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் இருக்கும் மக்கள் மருத்துவ ஆலோசனை பெறுவதற்காக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சிறப்பு தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளனர்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தீவிரமாக அதிகரித்து வருகிறது குறிப்பாக தமிழகத்தில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் அடுத்தடுத்த நாட்களில் பல மடங்கு உயர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள ராஜீவ்காந்தி அரசு தலைமை மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் வீட்டு தனிமை
இதுமட்டுமல்லாது தனியார் மருத்துவமனைகளிலும் வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு போதிய மருத்துவ கண்காணிப்பு மற்றும் சிகிச்சை முறைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் அறிகுறி அல்லாத அல்லது குறைந்த பாதிப்புடன் வீடுகளிலும் பொதுமக்கள் அதிக அளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு
சென்னையில் கடந்த 29-ந் தேதி 294 ஆக இருந்த கொரோனா பாதிப்பு 30-ந் தேதி 397 ஆக அதிகரித்தது. 31-ந் தேதி 589 ஆக உயர்ந்து விட்டது. இதேபோல் சென்னையை அடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 29-ந் தேதி 64 பேருக்கு இருந்த கொரோனா பாதிப்பு டிசம்பர் 30-ந் தேதி 103 பேருக்கு பரவி விட்டது. டிசம்பர் 31-ந் தேதி 137 பேருக்கு பரவியுள்ளது.

மருத்துவ ஆலோசனை
தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்னை மாநகராட்சி பகுதிகளில் வீட்டு தனிமை மற்றும் சிகிச்சையில் உள்ளனர். அவர்களுக்கு மருத்துவம் தொடர்பான ஏதேனும் அல்லது மருத்துவ ஆலோசனைகள் தேவைப்படுவதால் சென்னை மாநகராட்சி சார்பில் சிறப்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தனிமையில் இருப்பவர்களுக்கு மருத்துவ ஆலோசனையை வீட்டிலிருந்தே பெறும் வகையில் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

மாநகராட்சி சார்பில் தொலைபேசி எண்கள்
இந்த தொலைபேசி எண்களில் இருபத்தி நான்கு மணி நேரமும் பொதுமக்கள் தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோசனைகள் இலவசமாக பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது, 044 - 25384520, 044 - 46122300 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் சென்னை ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications