சென்னையில் வீட்டு உரிமையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. மாநகராட்சி எடுக்கப் போகும் அதிரடி முடிவு
சென்னை மாநகராட்சி பல ஆண்டுகளாக சொத்துவரி செலுத்தாதவர்களின் சொத்துக்களை ஜப்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை: பல ஆண்டுகளாக சொத்துவரி செலுத்தாமல் நிலுவை வைத்திருப்போரிடம் பல முறை கனிவாக கேட்டும் பயன் இல்லாமல் போனதால், ஜப்தி நடவடிக்கையை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாநகராட்சி என்றால் அது சென்னை தான். கோடிக்கணக்கான மக்கள் வசிக்கும் சென்னை மாநகராட்சியில் பல ஆயிரம் கட்டிடங்கள், வீடுகள் உள்ளன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் சுமார் 13 லட்சத்து 31 ஆயிரம் சொத்து உரிமையாளர்கள் உள்ளனர். சென்னை மாநகராட்சிக்கு முக்கிய வருவாய் இனமாக சொத்து வரிதான் இருக்கிறது. மாநகரின் பல்வேறு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு மாதந்தோறும் ஊதியம், ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதியம் வழங்குவதில் சொத்து வரி வருவாய் முக்கியமானதாக உள்ளது.
சென்னை மாநகராட்சி சொத்து வரி எப்படி விதிக்கப்படுகிறது?: மாநகராட்சி விதிகளின்படி சொத்துகள் மதிப்பீடு செய்யப்படுகிறது. அதன்படியே சொத்து வரி விதிக்கப்படுகிறது. சொத்து வரியானது ஒவ்வொரு ஆறுமாதத்திற்கு ஒருமுறை செலுத்த வேண்டும்.

மாநகராட்சி
சென்னை மாநகராட்சியில் உயர்த்தப்பட்ட சொத்துவரியின்படி தற்போது ஆண்டுக்கு சுமார் ரூ.1400 கோடி சொத்து வரி வருவாய் கிடைத்திருக்க வேண்டும். நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் ரூ.694 கோடியும், 2-ம் அரையாண்டில் தற்போது வரை ரூ.451 கோடிக்குமேல் வசூலாகியுள்ளது. ஆனால் இன்னமும் சிலர் சொத்து வரி செலுத்தாமல் உள்ளனர். நிலுவையில் உள்ள சுமார் 350 கோடிக்கு மேல் சொத்துவரியை வசூலிக்க மாநகராட்சி முயற்சித்து வருகிறது. ஆனால் விதிகளில் கடுமையான அம்சங்கள் இல்லாததால் சிலர் பல ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாமல் இருப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ட்ரோன் மூலம் அளவீடு
இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது: சொத்து வரி வருவாய் உயர்த்த மாநகராட்சி சார்பில் ட்ரோன் மூலம் அளவீடு செய்து, சொத்தின் வரி விதிப்புக்கு உட்பட்ட பரப்பின் அளவை துல்லியமாக கணக்கிட்டு, அதன் அடிப்படையில் மாநகராட்சி நிர்வாகம் சொத்து வரியை விதித்து வருகிறது. இதன் மூலம் மாநகராட்சியின் சொத்து வரி வருவாய் உயர்ந்துள்ளது. இதன் மூலம் நீண்ட காலமாக செலுத்தாத நிலுவை சொத்து வரி ரூ.350 கோடியை வசூலிக்கவும் மாநகராட்சி முனைப்பு காட்டி வருகிறது.

இணையத்தில் வெளியீடு
தற்போதைய நிலவரப்படி ரூ.25 லட்சத்துக்கு மேல் சொத்து வரி நிலுவை வைத்துள்ள 38 தனி நபர் மற்றும் நிறுவனங்களின் பெயர்கள், ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை நிலுவை வைத்துள்ள 140 பேர், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை நிலுவை வைத்துள்ள 321 பேர் என மொத்தம் 499 பேரின் விவரங்களை https://chennaicorporation.gov.in/gcc/propertytax_revision/ என்ற மாநகராட்சியின் இணையதளத்தில் வெளிடப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து மட்டும் ரூ.66 கோடியே 37 லட்சம் வரிவசூலிக்கப்பட வேண்டும் என்றார்கள்.

ஜப்தி நடவடிக்கை
அடுத்தகட்டமாக இவர்களின் உடைமைகளை ஜப்தி செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.. மேலும் 5 லட்சத்து 93 ஆயிரம் பேர் ரூ.50 ஆயிரத்துக்கும் குறைவாக சொத்து வரி நிலுவை வைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபற்றி மேலும் அதிகாரிகள் கூறும் போது, சொத்துவரி செலுத்தாததால் மாநகராட்சி நிர்வாகம் இதுவரை ஜப்தி நடவடிக்கை எடுத்தது இல்லை. ஆனால் இப்போது எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. பல ஆண்டுகளாக நிலுவை வைத்திருப்போரிடம் பல முறை கனிவாக கேட்டு பார்த்துவிட்டோம். எதற்கும் மசியாததால் ஜப்தி நடவடிக்கையை மேற்கொள்வது என மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கிரிடிட் கார்டு
அதற்கான மாநகராட்சியில் விதிகளை உருவாக்கி, மன்றத்தின் ஒப்புதலுடன் அரசின் அனுமதியை பெற இருக்கிறோம். அரசின் அனுமதிக்காக காத்திருக்காமல், மாநகராட்சி சட்ட விதிகளில் உள்ள அம்சங்கள் அடிப்படையில் மார்ச் மாதம் முதல் ஜப்தி நடவடிக்கையை தொடங்க போகிறோம். வரி செலுத்துவதை எளிமைப்படுத்த கிரெடிட் கார்டு மூலம் மாத தவணை முறையில் செலுத்தும் வசதி விரைவில் கொண்டுவரப்பட இருக்கிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். சொத்துவரியை பல நாட்களாக செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளவர்கள் உரிய காலத்தில் செலுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தினர். சொத்துவரி செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளவர்களின் சொத்துக்களை ஜப்தி செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டிருப்பதால் விரைவாக சொத்துவரியை செலுத்துவது நல்லதாக இருக்கும்.












Click it and Unblock the Notifications