மலர் போல மனம் படைத்த விஜயகாந்த் ஊர்வல மலர் அலங்கார செலவை ஏற்ற சென்னை மாநகராட்சி.. மழை போல பூக்கள்!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ள நிலையில் அவரின் உடலை ஏற்றிச் செல்லும் வாகனம் லட்சக்கணக்கான பூக்களால் அலங்கரிக்கப்பட்டது. அதற்கான செலவை சென்னை மாநகராட்சி ஏற்றுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று காலை காலமானார். அவரது மறைவையடுத்து சில மணி நேரம் சாலிகிராமம் வீட்டில் வைக்கப்பட்ட அவரது உடல் அங்கிருந்து ஊர்வலமாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கு கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் குவிந்தனர். இரவு வரை அங்கே பல்வேறு பிரபலங்களும் வந்து அஞ்சலி செலுத்தினர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர்.

இதையடுத்து இன்று விஜயகாந்த்தின் உடல் தீவுத்திடல் மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மக்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த் உடல் இறுதி ஊர்வல வாகனத்தில் ஏற்றப்பட்டு, மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு தேமுதிக அலுவலகம் நோக்கி இறுதி ஊர்வலம் சென்றது. தற்போது இறுதி ஊர்வலம் கோயம்பேட்டைச் சென்றடைந்துள்ளது.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம், தீவுத்திடலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் கேப்டன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
பல்லாயிரக்கணக்கான மலர்களால் விஜயகாந்த்தின் இறுதி ஊர்வல வாகனம் தயார் செய்யப்பட்டது. Eicher வாகனம் முழுக்க, மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்தும், பல்வேறு இடங்களிலும் இருந்தும் மலர்கள் அவசர தேவையின் பேரில் பெறப்பட்டு தீவுத் திடல் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு, மலர்கள் அலங்கார பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
சுமார் 6 லட்சம் மதிப்பில், மலர்கள் அலங்கார பணி நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மலர் அலங்காரப் பணி முழுக்க, சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் செலவில் நடைபெற்றுள்ளது. மலர் போன்ற மனம் கொண்ட கேப்டனின் உடல், மலர்ப் படுக்கைக்கு நடுவே, ஒய்யாரமாக வாகனத்தில் கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தை நோக்கிச் சென்று வருகிறது.
இதுதவிர, செல்லும் வழியெங்கும், மக்கள் மலர்களை தூவி கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேம்பாலங்களில் விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலத்தைக் காணக் குவிந்திருக்கும் மக்கள், பெரிய பெரிய பைகளில் பூக்களை, இறுதி ஊர்வல வாகனத்தின் மீது மழை போலத் தூவி வருகின்றனர்.
அடுத்தவரின் பசி பொறுக்காத மென்மையான மனதைக் கொண்ட கேப்டன் விஜயகாந்த்துக்கு, அவர் மனம் போன்ற மலர்களைத் தூவி பொதுமக்களும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தும் காட்சி, காண்போரை நெகிழச் செய்வதாக உள்ளது.












Click it and Unblock the Notifications