சட்டவிரோத பண பரிமாற்றம்: நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்- குற்றச்சாட்டுகள் பதிவு!
சென்னை: சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுகள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி பதிவு செய்தார். இதற்காக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு போராடி வருகிறார் செந்தில் பாலாஜி.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபாகரன், மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்கு விசாரணையையே தொடங்காத நிலையில் இதே வழக்கின் கீழ் அமலாக்கத்துறை எப்படி விசாரணையை தொடங்க முடியும் என்பது உச்சநீதிமன்றத்தின் கேள்வி. ஆகையால் உச்சநீதிமன்றத்தின் இறுதி உத்தரவு வரும் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யக் கூடாது என வாதிட்டார்.
ஆனால் அமலாக்கத்துறை தரப்போ, மத்திய குற்றப் பிரிவு வழக்குக்கும் அமலாக்கத்துறையின் இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என வாதிட்டது. அப்போது செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகாதது குறித்து நீதிபதி அல்லி கேள்வி எழுப்பினார். இதனால் குற்றச்சாட்டுகளை வீடியோ கான்பரன்ஸ் மூலம் பதிவு செய்வது தொடர்பாக நீதிபதி அல்லி இருதரப்பிடமும் கருத்து கேட்டார். இதற்கும் செந்தில் பாலாஜி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனை நிராகரித்த நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 8-ல் (இன்று) நேரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்; அப்போது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என உத்தரவிட்டார்.
இதனையடுத்டு இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் இருக்கையில் அமர அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அப்போது நீதிபதி கேட்ட கேள்விக்கு, தம் மீதான இந்த வழக்கு பொய்யானது என செந்தில் பாலாஜி பதிலளித்தார். இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 16-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications