மகாபலிபுரம் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு 18 வருடங்களுக்கு பிறகு விருந்து.. சென்னைக்கு குஷி
சென்னை: தமிழ்நாட்டில் அதிக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மாமல்லபுரம் சிற்பங்களுக்கு பெயர்போன ஊராகும். இந்த ஊர் முழுவதும் தொல்லியத்துறையின் பாரம்பரிய சின்னங்கள் உள்ளன. பல்லவர் காலத்து கட்டிடகலைக்கு எடுத்துக்கட்டாக பல்வேறு இடங்கள் உள்ளன. இதன் காரணமாக ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மகாபலிபுரத்திற்கு தினமும் வருகிறார்கள். அப்படி வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சென்னை அடையாறு-மாமல்லபுரம் இடையே இயக்கப்பட உள்ள டபுள் டக்கர் பஸ் இயக்கப்பட உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடந்தது.
சென்னையில் 1990களில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், எரிபொருள் சேமிப்பை அதிகரிக்கவும் சென்னையில் டபுள் டக்கர் பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பேருந்துகளில் ஏறி சென்னை மாநகர சாலைகளை ரசித்தபடியே பயணம் செய்து வந்தார்கள். ஆனால் 2006க்கு பிறகு டபுள் டக்கர் பேருந்துகள் சரிவர இயக்கப்படவில்லை. 2007ம் ஆண்டுக்கு பிறகு அடியோடு டபுள் டக்கர் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன.

இந்நிலைய்ல 18 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் சென்னையில் டபுள் டக்கர் பஸ் இயக்கப்பட உள்ளது. குறிப்பாக சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளை குறிவைத்த இந்த பஸ் சேவை தொடங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக சென்னை அடையாறில் இருந்து மாமல்லபுரத்திற்கு டபுள் டக்கர் பஸ் சேவைகள் சுற்றுலா பயணிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சிகப்பு நிறம் கொண்ட டபுள் டக்கர் பஸ் சோதனை ஓட்டம் சென்னை அடையாறில் இருந்து மாமல்லபுரம் வரை கிழக்கு கடற்கரை சாலை வழியாக நேற்று நடந்தது.
தற்போதைய நிலையில் மாமல்லபுரம் நோக்கி வந்த டபுள் டக்கர் பஸ் உத்தண்டி டோல்கேட்டை கடக்கும்போது அங்குள்ள மேற்கூரை மீது உரசி செல்கிறதா? எனவும் அங்கு அந்த பஸ் கடக்கும் போது ஆய்வு செய்தனர். அதில் சுமார் ஓரு அடி உயர இடைவெளியில் பஸ் மேற்கூரையை உரசாமல் வெற்றிகரமாக மாமல்லபுரம் நோக்கி சென்றுவிட்டது.
இந்த பஸ் முழுக்க குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருந்தது. நேற்று சோதனை ஓட்டத்தில் சென்ற டபுள் டக்கர் பஸ் மாமல்லபுரம் பஸ் நிலையத்துக்கு சென்றது. இதனை பார்த்த சுற்றுலா பயணிகள் ஆர்வமாக ஏறி பார்த்து செல்பி எடுத்தனர். மாமல்லபுரத்திற்கு விடுமுறை தினம் மற்றும் விசேஷ நாட்களில் அதிக அளவில் இயக்கப்படும் என தெரிகிறது.
சாதாரண மின்சார பஸ்களில் 60 பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். ஆனால் இந்த டபுள் டக்கர் பஸ்களில் 90 பயணிகளை ஏற்றி செல்லும் வகையில் இருக்கைகள் உள்ளது. மின்சார சார்ஜ் மூலம் இந்த பஸ்கள் இயக்கப்பட உள்ளன. டீசலில் இயங்காது என்பதால் மாசு குறைவாவே இருக்கும். இந்த பேருந்துக்கு பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் இடையே அதிக வரவேற்பு இருக்கும் என போக்குவரத்து அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications