சென்னை டூ விழுப்புரம்.. 45 நிமிடம் குறைய போகுது.. மதுரை, கோவை போறவங்களுக்கு நல்ல செய்தி
சென்னை: சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் ரயில் வேகத்தை 110 கிமீ இருந்து 130 கிமீ ஆக அதிகரிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை- திருச்சி- மதுரை- திருநெல்வேலி-கன்னியாகுமரி மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில்களின் நேரம் குறைய அதிக வாய்ப்பு உள்ளது.
சென்னையை தலைமையிடமாக கொண்ட தெற்கு ரயில்வேக்கு உள்பட்ட ரயில்வே வழித்தடங்களில் ரயில் தண்டாவளங்களின் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து மதுரை வரை இருவழிப்பாதை உள்ளது. இதேபோல் சென்னை கோவை வழித்தடமும் இருவழிப்பாதையாக உள்ளது. சென்னை பெங்களூரு வழித்தடம், சென்னை - ரேணிகுண்டா வழிதடமும் வலுவாக கட்டமைப்புடன் உள்ள வழித்தடங்கள் ஆகும்.

சென்னையில் இருந்து தற்போது பல்வேறு வழித்தடங்கள் மேம்படுத்தப்பட்டு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை சென்ட்ரல்-கூடூர்,சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், ஜோலார்பேட்டை, சென்னை சென்ட்ரல்-ரேணிகுண்டா ஆகிய வழித்தடங்கள் மேம்படுத்தப்பட்டதால் ரயில்கள் வேகம் மணிக்கு 110 இல் இருந்து 130 கி.மீ. வேகமாக அதிகரித்து இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக கூடூர் வழித்தடத்திலும், கோவை,பெங்களூரு வழித்தடத்திலும் வரும் ரயில்களின் நேரம் கணிசமாக குறைந்துள்ளது.
தெற்கு ரயிவேயில் மொத்தம் 413 கி.மீ.தொலைவுக்கு ரயில் பாதைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. இப்பாதைகளில் 130 கி.மீ. வரையிலான வேகத்தில் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தற்போது 1,218 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதைகள் மேம்படுத்தப்பட்டு, இப்பாதைகளில் 110 கி.மீ. வேகத்தில் விரைவு ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் ரயில் வேகம் 110 கி.மீ. இருந்து 130 கி.மீ. ஆக அதிகரிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
தெற்கு ரயில்வே அதிகாரிகள் இதுபற்றி கூறும் போது, சென்னையில் இருந்து செல்லும் முக்கியமான வழித்தடங்களில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் விரைவு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளோம். இதற்காக, ரயில் தண்டாவளங்களின் தரத்தை உயர்த்துவது, சிக்னல் தொழில்நுட்ப மேம்பாடு, ரயில் பாதைகளில் வளைவுகளை நீக்குவது, தேவையற்ற நுழைவுகளை அகற்றுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
சென்னை எழும்பூர்-செங்கல்பட்டு-விழுப்புரம் வழித்தடத்தில் தற்போது மணிக்கு 90 முதல் 110 கி.மீ. வரையிலான வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்தபாதையில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தண்டவாள பாதையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்தஆண்டு மார்ச் மாதத்துக்குள் பணிகளை முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் செல்லும்போது, பயண நேரம் 45 நிமிடம் வரை குறையும். இதுபோல, ஜோலார்பேட்டை-கோயம்புத்தூர் வழித்தடத்தில் விரைவு ரயில்களை 110 முதல் 130 கி.மீ. வரை வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளோம் என்றார்.
ஜோலார்பேட்டை-கோயம்புத்தூர் வழித்தடத்தில் சென்னையில் இருந்த 130 கிமீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டால், சென்னை கோவை இடையே பயண நேரம் மிகப்பெரிய அளவில் குறைய வாய்ப்பு உள்ளது. ஏனெனில் ஏற்கனவே சென்னை-ஜோலார்பேட்டை இடையே 130 கிமீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகிறது.
இதனால் ரயில்கள் இயக்கம் சென்னை கோவை இடையே முழுமையாக 130 கிமீ வேகத்தில் சென்றால், பயணநேரம் கிட்டத்தட்ட 1.30 மணி நேரம் வரை குறைய வாய்ப்பு உள்ளது. இதேபோல் மதுரை -சென்னை வழித்தடத்தில் பயண நேரம் 45 நிமிடம் வரை குறைய வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications