மயக்க மருந்தை கலந்து கொடுத்து மருமகளை பலாத்காரம் செய்த மாமனார்.. ஆயுசுக்கும் இனி ஜெயில் தான்!
சென்னை: சென்னை புலியந்தோப்பு பகுதியில் மருமகளை பலாத்காரம் செய்த மாமனாருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாட்டு மருந்து எனக்கூறி கசாயத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து 18வயது கூட நிறைவடையாத மருமகளை மாமானார் பாலியல்பலாத்காரம் செய்தது நீதிமன்றத்தின் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட மாமானார் தனது மீதி ஆயுளை சிறையில் கழிக்க உள்ளார்.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் வசித்தவர் அப்துல் ரகுமான் (51). இவரது மனைவி மதீனா (39). இவர்களது மகனுக்கு கடந்த 2017ம் ஆண்டு கல்யாணம் நடந்தது. 18 வயது பூர்த்தியாகாத இளம்பெண்ணை தங்களது மகனுக்கு கல்யாணம் செய்து வைத்துள்ளனர்.

குடித்ததும் மயக்கம்
திருமணமான 10 நாளில் புதுப்பெண் இருமல் பிரச்னையால் அவதிப்பட்டிருக்கிறார். அப்போது அப்துல் ரகுமான், நாட்டு மருந்து எனக்கூறி கசாயத்தில் மயக்க மருந்தை மருமகளுக்கு கலந்து கொடுத்துள்ளார். அதை குடித்ததும் புதுப்பெண் மயக்கமானார்.

சாப்பாட்டில் மருந்து
அப்போது அப்துல் ரகுமான் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், அவ்வப்போது சாப்பாட்டில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து, பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இதுகுறித்து வெளியே சொன்னால் பாலியல் பலாத்காரத்தின் போது எடுத்த நிர்வாண படத்தை வெளியிட்டு விடுவதாக அந்த பெண்ணை மிரட்டி இருக்கிறார்.

வழக்கு விசாரணை
இதற்கு, அப்துல் ரகுமானின் மனைவியும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் அத்துமீறல் அதிகமானதால் அந்த புதுப்பெண் அளித்த புகாரின் பேரில், அப்துல் ரகுமான், அவரது மனைவி மதீனா ஆகியோர் மீது புளியந்தோப்பு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்கள். இந்த வழக்கு விசாரணை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.

5 லட்சம் நிவாரணம்
வழக்கை விசாரித்த நீதிபதி எம்.ராஜலட்சுமி, அப்துல் ரகுமான், அவரது மனைவி மதீனா ஆகியோர் மீதான குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அப்துல் ரகுமானுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், மதீனாவுக்கு 10 ஆண்டு சிறை தண்டையும், ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இளம் பெண் பலாத்காரம்
அண்மையில் காஞ்சிபுரத்தில் இளம் பெண்ணுக்கு காதல் வலை வீசிய ஒருவர், அந்த பெண்ணைவேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி காரில் அழைத்து சென்றுள்ளார். செல்லும் வழியில் குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவருடன் சேர்த்து மொத்தம் 5 பேர் காருக்குள் வைத்து இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மதுவால் போதை தலைக்கேறி எதுவும் செய்ய இயலாத துயரமான நிலைக்கு தள்ளப்பட்ட அந்த பெண்,. அதன் பின்னர் அளித்த புகாரின் பேரில் 4 பேரை கைது செய்து மேலும் தலைமறைவாக உள்ள ஒரு நபரை வலைவீசி தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications