எல்லா காய்கறிகளும் அரை கிலோ ரூ.20 மட்டுமே.. சென்னை மக்களுக்கு உதவ புதிய திட்டம்.! எங்கு கிடைக்கும்?
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையில் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குறைந்த விலையில் காய்கறிகளை விற்கும் திட்டத்தை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
மிக்ஜாம் புயல் மொத்தமாகச் சென்னையைப் புரட்டிப் போட்டது. இந்த புயல் சென்னை அருகே கரையைக் கடக்கவில்லை என்றாலும் அது திங்கள் கிழமை சென்னை அருகே வந்து தீவிர புயலாக வலுப்பெற்ற நிலையில், அன்று நாள் முழுக்க நகரில் மழை கொட்டித் தீர்த்தது.

இதனால் சென்னையில் பாதிப்புகள் மிக மோசமாகவே இருந்தது. சென்னையில் எல்லா இடங்களும் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், நகரம் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. இருப்பினும், முழுமையாக நகரம் இயல்பு நிலைக்கு வரவில்லை.
அரை கிலோ ரூ.50: சென்னை வெள்ளத்தால் பொதுமக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்களை வாங்கவே பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், திடீரென காய்கறி வரத்தும் குறைந்ததால் விலையும் அதிகரித்த நிலையில், பொதுமக்கள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே சென்னையில் அரை கிலோ காய்கறிகளை ரூ. 20க்கு விற்கும் திட்டத்தை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம். தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக நகர் முழுக்க 100 வாகனங்களில் காய்கறி மக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று அரை கிலோ ரூ.50க்கு விற்பனை செய்யப்படும்.
எம்ஆர்கே பன்னீர்செல்வம்: இது குறித்து அவர் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் மேலும் கூறுகையில், "மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாகப் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு குறைந்த விலையில் காய்கறி விற்கும் திட்டத்தைத் தொடங்கி உள்ளோம். இத்திட்டத்தில் அனைத்து காய்கறிகளும் ரூ. 20க்கு விற்பனை செய்யப்படும். கொள்முதல் செய்யப்பட்ட விலையிலேயே காய்கறிகள் விற்கப்படுகிறது.
முதற்கட்டமாகச் சென்னையில் மட்டும் இப்போது இந்த முயற்சியை ஆரம்பித்துள்ளோம். தேவைப்பட்டால் புயலால் பாதிக்கப்பட்ட மற்ற அண்டைய மாவட்டங்களிலும் இந்தத் திட்டம் தொடங்கப்படும். சென்னை முழுமையாகச் சராசரி நிலைக்குத் திரும்பும் வரை காய்கறிகள் விற்கப்படும்.. காய்கறி விலை அதிகரித்துள்ள நிலையில், மக்களுக்காகக் குறைந்த விலையில் விற்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இப்படி தினசரி 20 டன் காய்கறிகளைக் கொள்முதல் செய்து அதைக் குறைந்த விலைக்கு விற்கவுள்ளோம்.. முதற்கட்டமாக நாளை முதல் 100 வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை தொடங்கப்படும்.
இயல்பு நிலைக்குத் திரும்பும் சென்னை: தமிழ்நாடு அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் சென்னை இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. கடந்த காலங்களில் மழை வெள்ளம் ஏற்பட்ட போது பல நாட்கள் ஆகியும் சென்னை இயல்பு நிலைக்கு வர முடியாத சூழல் இருந்தது. ஆனால், இப்போது அந்த நிலை இல்லை. 2,3 நாட்களில் சென்னை இயல்பு நிலைக்கு வந்துள்ளது. இதற்கு முதல்வர் எடுத்த நடவடிக்கையே காரணம். மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் மீட்புப் பணிகளைக் கவனித்து வருகிறார்கள்" என்றார்.
மேலும், கோயம்பேடு மார்கெட் வரத்து வழக்கம் போல வர ஆரம்பித்துள்ளது என்று கூறிய அவர், சில நாட்களில் கோயம்பேடு மார்கெட்டில் அனைத்து காய்கறிகளின் வரத்து அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications