அலர்ட்.. பூண்டி ஏரியில் விரைவாக அதிகரிக்கும் நீர் திறப்பு.. சென்னை மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
சென்னை: சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரியிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்ட நிலையில், கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் பிற கடலோரப் பகுதிகளில் மழை அதிகரித்துள்ளது. அக்டோபர் 18 ஆம் தேதி முதல் மழையின் தீவிரம் மேலும் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கொசஸ்தலை ஆறு மற்றும் கல்லாறு ஆகியவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அவ்வாறு வரும் வெள்ள நீராலும், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து வரும் கிருஷ்ணா நீர், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் நீராலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு நீர்வரத்து வேகமாக அதிகரித்து வருகிறது.
திருவள்ளூரில் அமைந்துள்ள சென்னையின் குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பூண்டி ஏரியில் இருந்து முதற்கட்டமாக, நேற்று 700 கன அடி உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்பட்டது.
இந்த சூழலில் நேற்று இரவும் கனமழை கொட்டித் தீர்த்ததால், பூண்டி ஏரியின் நீர்மட்டம் மேலும் அதிகரித்தது. இதன் காரணமாக, ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 2,300 கனஅடியில் இருந்து 4,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, சென்னைக்கு குடிநீர் தரும் மற்றொரு ஏரியான புழல் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உபரி நீர் கால்வாய் அருகே தாழ்வான பகுதியில் உள்ள மக்கள், எச்சரிக்கையுடன் இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications