சென்னையில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை.. செம்ம ஜில் கிளைமேட்!
சென்னை: நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழக பகுதிகளின் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக.இடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஒவ்வொரு நாளும் வானிலை மையம் வெளியிடும் அறிவிப்பில், தமிழகத்தில் மழை தொடர்ந்து நீடிக்கும் என்று குறிப்பிடப்பட்டு வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அதிகபட்சமாக 20 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. பொன்னனியார் அணை, பாண்டவையாறு, வத்தலை அணைக்கட்டு, நன்னிலம் பொன்னேரி, பொன்னமராவதி, கல்லட்டி, தியாகதுர்கம் ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
அஞ்சட்டி, கலயநல்லூர், சூளாங்குறிச்சி, எடப்பாடி, மன்னார்குடி, நெடுங்கல், சத்தியார், நாமக்கல் ஆகிய பகுதிகளில் தலா 6 செ.மீ. மழையும், தாளவாடி, புதுச்சத்திரம், திருப்பத்தூர், புலிப்பட்டி, திருச்சி டவுன், மாயனூர், பென்னாகரம், கிருஷ்ணகிரி, பஞ்சப்பட்டி, பையூர், கிருஷ்ணராயபுரம் ஆகிய பகுதிகளில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

வானிலை அறிவிப்பு
தமிழகம் மற்றும் கடலோர ஆந்திரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

22 மாவட்டங்களில் நாளை கனமழை
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் நாளை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

31 மற்றும் 1-ம் தேதிகளில் கன மழை
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, சேலம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 2-ம் தேதி, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் மிதமான மழை
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்று முதல் வரும் 2-ம் தேதி வரை, குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.
கேரள கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், வரும் 2-ம் தேதி வரை, மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications